டோல்கேட்களை மூடாமல் ஒயமாட்டேன்... வேல்முருகன் திட்டவட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களை அகற்றாமல் தாம் ஓயமாட்டேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
எத்தனையோ பெரிய தலைவர்கள் எல்லாம் விசாரணை ஆணையம், நீதிமன்றத்துக்கு என சென்றிருக்கிற நிலையில், ஒரு நடிகராக இருந்து கொண்டு ரஜினி பின்வாங்குவது அபத்தமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இதான் மோடி கெத்து.. தடை விதிச்ச நாட்டின் அதிபரையே குஜராத்துக்கு வர வச்சிட்டாரே!
வாழ்த்து
தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வேல்முருகன். பன்ருட்டி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை திமுக கைப்பற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தமைக்காக ஸ்டாலின் நன்றி கூறியதுடன் அவர்களை வாழ்த்தி அனுப்பினார். பின்னர் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஒன் டூ ஒன் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் விவரத்தை தனியாக பார்க்கலாம்.
போராட்டம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழகம் முழுவதும் டோல்கேட்கள் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் பகல்கொள்ளை நடப்பதாகவும், அதற்கு எதிரான தனது போராட்டம் ஒரு போதும் ஓயாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். டோல்கேட்களால் மக்கள் படும் அவஸ்தைகளை அறிந்து தான் அதற்கு எதிராக தாம் குரல்கொடுத்து வருவதாக கூறினார். சுங்கச்சாவடி கொள்ளை பற்றி மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
அவமானம்
குடியுரிமை சட்டம் இன்னும் அமலுக்கே வராத நிலையில், அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று அறிவாளியை போல் முதல்வர் கேள்வி கேட்பதாகவும் இதனை தாம் எங்கு சென்று சொல்வது எனத் தெரியவில்லை என்றும் விமர்சித்தார். பாதிக்கப்பட்டுவிடுவார்கள் என்று தான் திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருவதாகவும், அதைக்கூட புரிந்துகொள்ளாமல் முதல்வர் பேசுவது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறினார். மேலும், இது போன்ற ஆட்சியாளர்களின் கீழ் குடிமக்களாக வாழ்வதே அவமானத்திற்குரியது என சாடினார்.
அபத்தம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக ரஜினி பின்வாங்குவது அபத்தமாக உள்ளது எனக் கூறினார். தமிழகத்தில் கருணாநிதி போன்று பெரிய தலைவர்கள் எல்லாம் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கும் நிலையில் ஒரு நடிகராக இருந்துகொண்டு ரஜினி செல்ல தயங்குவது ஏற்கமுடியாது ஒன்று எனக் கூறினார். இதைவிட மக்கள் கூடி சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடும் என அவர் தெரிவித்திருக்கும் காரணத்தை நினைத்தால் வேடிக்கையாக உள்ளதாக சாடினார்.