அதிமுக ஆட்சி ஊழலின் உறைவிடம்... நீதி விசாரணை கோரும் வேல்முருகன்
சென்னை: அதிமுக ஆட்சி ஊழலின் உறைவிடமாக திகழ்வதாகவும், ஆசிரியர் தகுதி தேர்வு ஊழல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழல் என்றால் அது பணத்தோடு மட்டுமே தொடர்புடையது அல்ல; எல்லாத் துறைகளிலும் எல்லா விடயங்களிலும் நடைபெறும் முறைகேடுகளும் ஒழுங்கீனங்களுமே ஊழல்தான் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திமுகவின் "மூன்று முடிச்சு".. ஒரு பக்கம் பிகே.. மறுபக்கம் கூட்டணி.. இன்னொரு பக்கம் ரஜினி!
ஊழல்
அண்மையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்து, அதற்குக் காரணமானவர்கள் என இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை, தேடுதல் வேட்டை தொடர்கின்றன. அதனையடுத்து இப்போது ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்படி குற்றம் சாட்டுபவர்கள், 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் மாநிலத் தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோரே.
குற்றச்சாட்டு
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
3,000 பேர்
ஆசிரியர் தேர்வு ஊழல் பிரச்சனை அத்தோடு முடியவில்லை; ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதாகவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50, மொத்த மதிப்பெண் 100 ஆகும். இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணை
விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்ததை அடுத்து, இந்த மாதம் வெளியிடப்பட இருந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விடைத்தாள்களை மீண்டும் ஆய்வு செய்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதேநேரம் முறைகேடு குறித்து விசாரணையும் நடத்தப்படவுள்ளது.
வலியுறுத்தல்
அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து தக்க விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.