ஊரடங்கு நீட்டிப்பா? மாவட்ட ஆட்சி தலைவர்கள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை
சென்னை: கொரோனா ஊரடங்கு முடிய 2 நாட்களே உள்ள நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 248 நாட்கள் அதாவது சுமார் 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.
தளர்வு
ஊரடங்கு அமலில் இருந்தாலும் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடைகள் படிப்படியாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டன. கடைகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ரயில், பேருந்து, ஆட்டோ, கார் ஓட அனுமதிக்கப்பட்டது. கோயில்களை திறந்து வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டது. தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அனுமதியில்லை
இதுவரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகள், கல்லுரிகள் திறப்பு, மெரினா கடற்கரை, நீச்சல்குளம், டாஸ்மாக் பார் உள்ளிட்ட சிலவற்றுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.. அவற்றுக்கு இனி தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மீட்டிங்
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. நவம்பர் மாத ஊரடங்கு வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்படலாம். இது குறித்து இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒபிஎஸ்
அதன்பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் சில முக்கிய தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படலாம்.
பார்கள்
குறிப்பாக டிசம்பர் 1ம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி, டாஸ்மாக் பார் திறக்க அனுமதி உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முக்கியமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வருகிற ஜனவரி மாதம் முதல் திறக்கலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். . தமிழக அரசு புதிய தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது.