ரஜினியிடம் "இதை" சொல்லிட்டு வந்தேன்.. சந்தித்து விட்டு வந்த தமிழருவி மணியன்.. என்ன சொல்லிருப்பார்?
ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து பேசினார் தமிழருவி மணியன்
சென்னை: அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என ரஜினி சொல்லி இருந்த நிலையில், இன்று தமிழருவி மணியன், அவரை சந்தித்து பேசி உள்ளது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது. " உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் சொன்னேன்" என்று தமிழருவி மணியன் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஜினிகாந்த் நேற்று முன்தினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அரசியல் வருகை குறித்து ஏதாவது அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அது முழுமையான ஒரு ஆலோசனை கூட்டமாகவே மட்டும் அது நடந்து முடிந்துவிட்டது.. இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள்கூட இருப்போம் என்று மாவட்ட செயலாளர்கள் என்னிடம் சொன்னார்கள்.. நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி உள்ளேன்" என்றார்.
அதுமட்டுமல்ல, ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவரது அரசியல் வருகை எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துள்ளார்.
எதற்காக சந்திப்பு இது என்று தெரியவில்லை.. ஆனால், மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், ரஜினிகாந்த் எடுக்கப்போகும் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது அரசியல் வட்டாரத்தில் கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகிறது... கடந்த மாதம், சோஷியல் மீடியாவில் வைரலான ஒரு கடிதத்துக்கு ரஜினி விளக்கம் தந்திருந்தார்.. அப்போதும் இதேபோல ஒரு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவே தமிழருவி மணியன் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார்.
ரஜினி என் நண்பர்... சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் ஆதரவு கேட்பேன் - கமல்
அதுபோலவே, இப்போதும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. ஒருவேளை கட்சி தொடங்குவதற்கான பணிகள் அல்லது திட்டங்கள் குறித்து இருவரும் பேசினார்களா அல்லது வேறு ஏதேனும் விஷயமா என்று தெரியவில்லை. ஆனால், தமிழருவி மணியன் போயஸ் கார்டன் வந்தாலே தமிழக அரசியல் அனல் அடிக்க தொடங்கிவிடுகிறது.
ரஜினிகாந்துடன் தமிழருவி மணியனின் இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்தது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், "ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது எனக்கு தெரியாது.. அவருக்கு தான் தெரியும்... உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் சொன்னேன்.. ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.. தமிழக மக்களிடம் எதையும் அவர் மறைக்க தேவையில்லை" என்றார்.