பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்
சென்னை: பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதையுமே செய்யாததைப் போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
தேசிய கல்விக்கொள்கைக்கு நடிகர் சூர்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து 10 கேள்விகளை முன்வைத்தார். இதன் காரணமாக தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்து பெரிய அளவில் விவாதங்கள் துவங்கி உள்ளன.
இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
திமுக கடும் போராட்டம்
இது ஒருபுறம் எனில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம், மும்மொழி கொள்கை, 8வழிச்சாலை உள்பட எந்த திட்டமாக இருந்தாலும் திமுக கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. இதனை முறியடிக்க பாஜக தலைமை என்ன செய்வது என்று தீவிரமான ஆலோசனையில் உள்ளது.
மோடிக்கு எதிராக சதி
அதேநேரம் பிரதமர் மோடி தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் திட்டமிடுவதாக பாஜக சந்தேகத்தில் உள்ளனர்.
திமுக கூட்டணி
சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில், புதிய கல்விக் கொள்கை தேவைக்கு அதிகமாக அரசியலாக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். திமுக - மதிமுக-விசிக கூட்டணி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான கூட்டணி என்று கடுமையாக விமர்சித்தார்.
மோடி எதுவும் செய்யவில்லையா
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு எதையுமே செய்யாததைப்போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் வேதனை தெரிவித்தார். வேலூரில் கடந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெறாமல் போனதற்கு திமுக தான் காரணம் என்றும் தமிழிசை குற்றம்சாட்டினார்.