டிவி பெட்டி கொடுத்தீர்களே.. தண்ணீர் பிரச்சினைக்கு என்ன செய்தீர்கள்.. திமுகவுக்கு தமிழிசை சுளீர்!
Recommended Video
சென்னை: திமுக ஆட்சியில் தொலைகாட்சி பெட்டி கொடுத்தீர்களே, தண்ணீர் பிரச்சினைக்கு என்ன தொலைநோக்கு திட்டங்களை வகுத்தீர்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காமல் அரசியல் கட்சிகள் தத்தம் ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர்.
தண்ணீர் பிரச்சினைக்கு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதையும் கூறாமல் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதில் மட்டுமே அரசியல் கட்சியினர் குறியாக உள்ளனர்.
தீர்க்க இயலவில்லை
இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு மக்கள்தான் தண்ணீருக்காக அல்லோகலப்படுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் என்னதான் தண்ணீர் விடுமாறு தன் கழகத்தினருக்கு அறிவுறுத்தினாலும் ஒட்டுமொத்த தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை என்பது தீர்க்க இயலாத ஒன்று.
|
கடும் விமர்சனம்
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மழை காலத்தில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க வேண்டும், நீர் நிலைகள் தூர்வாரப்பட வேண்டும் உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை ஆட்சியாளர்கள் பொருட்படுத்துவதில்லை. இந்த நிலையில் தண்ணீர் பிரச்சினைக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார் ஊழலில் நீந்தும் அமைச்சர் எஸ்பி வேலுமணி என ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
நிரந்தர தீர்வு
ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழிசை சவுந்திரராஜன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவதாக சொன்ன ஸ்டாலின் அவர்களே வீராணம் குழாயில் ஊழல் , கூவத்தில் படகு விடுவதாக ஊழல், சென்னையை சுற்றிலும் ஏரிகுளங்கள் காணாமல் போனதும் ஆற்று மணல் கொள்ளை போனதும் திமுக ஆட்சி காலத்தில்தானே. சென்னை குடிநீர் பிரச்சனைக்கு பலமுறை ஆண்ட திமுக செய்த நிரந்தர தீர்வு என்ன?
|
தண்ணீர் பிரச்சினை
தொலைக்காட்சி வழங்கி தேர்தல் வெற்றி தேடிய நீங்கள் தண்ணீர் பிரச்சினைக்கு செய்துமுடித்த தொலைநோக்குத்திட்டங்கள் என்ன?தினம் ஒரு அறிக்கைதான் தீர்வாகுமா.? என தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.