தமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை.. பொய் சொல்றதுல்ல மோடியை மிஞ்சிவிட்டார்.. ஆர் எஸ் பாரதி
சென்னை: பிரதமர் மோடியை மிஞ்சும் வகையில் பொய் சொல்ல முடியும் என்கிற வகையில் தமிழிசை பேசியிருப்பதாக, ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
ராகுலை பிரதமராக முன்மொழிந்துள்ள ஸ்டாலின் ஒருபுறம் சந்திரசேகர் ராவிடமும், மறுபுறம் மோடியிடமும் பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் தமிழசை சவுந்திரராஜன் தூத்துக்குடியில் பேட்டி அளித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின், பாஜகவுடன் பேசியதை நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார் என்றும், நிரூபிக்க தவறினால் தமிழிசை, மோடி ஆகியோர் அரசியலைவிட்டு விலகத்தயாரா என்றும் சவால் விடுத்தார். பொய்ப்பேட்டியை அளித்ததன் மூலம் தமிழிசை தன்னை தரம் தாழ்த்திக்கொண்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.
தமிழிசை நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஓட வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி
இந்நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜகவுடன் திமுக பேசியதாக ஒரு பொய்யை தமிழிசை கூறியுள்ளார்; மோடியை மிஞ்சும் வகையில் பொய் சொல்ல முடியும் என்கிற வகையில் தமிழிசை பேசியிருக்கிறார்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்வை ஸ்டாலின் சந்தித்தது மரியாதை நிமிர்த்தமானது. இந்த சந்திப்பு பற்றி புரிந்துகொள்ளாமல் தமிழிசை பேசுயிருப்பது, அவர் இன்னும் அரசியல் பக்குவம் அடையவில்லை என்பதை காட்டுகிறது.
இதனால் தமிழ்நாட்டு அரசியலில் எந்தவிதமான குழப்பமும் வராது. கருணாநிதி எதிர்த்தால் உறுதியாக எதிர்ப்பார். ஆதரித்தால் உறுதியாக ஆதரிப்பார் அவர் வழியிலே வந்த ஸ்டாலின் தான் ராகுல் காந்தி தான் பிரதமர் என முதல்முதலாக அறிவித்தார். அதில் இன்று வரை கடுகளவும் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.