வேலூர் பக்கமே போகவில்லையே ஏன் மேடம்.. தமிழிசை கூல் பதில்!
Recommended Video
சென்னை: வேலூர் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவேண்டாம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசையை, அதிமுக தலைமை தடுத்து விட்டதாக ஒரு பேச்சு தமிழக அரசியலில் சுற்றி வருகிறது.
வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முஸ்லீம் வாக்காளர்கள் கணிசமாக இருப்பதால், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் அங்கு பிரச்சாரம் செய்வது அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு எதிராக திரும்பிவிட கூடும் என்ற அச்சம்தான் இதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் இதுதொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் அதிகம் இருக்கிறது. இப்போதைக்கு அதுதான் முக்கியமான பணி என்பதால், கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. பிற காரணங்கள் இல்லை. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
ஆனால், மத்திய அரசு, முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியுள்ள இந்த சூழ்நிலையில், பாஜக தலைவர்கள், பிரச்சாரத்திற்கு செல்வது சரிபடாது என்பதுதான் அதிமுக தலைமையின் அச்சத்திற்கு காரணம் என்கிறது அக்கட்சி வட்டாரம். முத்தலாக் சட்டத்திற்கு அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் ஆதரவு அளித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அதிமுக தனது முஸ்லீம் தலைவர்களை வைத்து வேலூர் தொகுதியில் ஓட்டு வேட்டையாடி வருகிறது. முத்தலாக் விவகாரத்தை முந்தைய காலத்தில் தங்களது முஸ்லீம் ஆதரவு நடவடிக்கைகளை சுட்டிக் காட்டி, சமாளித்து வருகிறது. ஆனால் பாஜக அப்படியல்ல. அது இந்துத்துவா ஆதரவு கட்சியாக அறியப்படுகிறது. எனவே, வேண்டுமென்றே பாஜகவினர் களமாடுவதை அதிமுக தவிர்க்கிறதாம்.