பாஜக ஆபீசுக்குள் கால் வைக்க கூடாது.. எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்ட தமிழிசை
சென்னை: சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்துக்குள் எஸ்.வி.சேகர் வரக்கூடாது என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 'தண்டனை' கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாஜக தமிழக தலைவராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். ஆனால் பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் இவரை அப்பதவியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகிறார்கள்.
அதில் பலரும் பிரதமர் நரேந்திர மோடி வரை பழக்கமானவர்கள் என்றபோதிலும்கூட, இதுவரை அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.
பாஜக ஆபீசுக்குள் நோ-என்ட்ரி சொன்ன தமிழிசைக்கு கெட்-அவுட்டா? எஸ்.வி.சேகர் சொல்வதை பாருங்க
மதுரையில் மாஸ் காட்டிய தமிழிசை
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, பாஜக பொதுக்கூட்டத்தில் திரளாக தொண்டர்களை அழைத்து வந்து மாஸ் காட்டியிருந்தார் தமிழிசை. நிகழ்ச்சிக்கு பிறகு, தமிழிசையை பிரதமர் மோடி பாராட்டி சென்றதாக கூறப்பட்டது. இதுபோன்ற ஒரு செய்தியை தமிழிசை ஆமோதிப்பதை போல டிவிட்டரில் தகவல் பகிர்ந்திருந்தார்.
கோபம் அதிகரிப்பு
இந்த நிலையில், தமிழிசை மீது அவரின் எதிர் கோஷ்டியினருக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில்தான், சென்னை, திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக பிரமுகர், எஸ்.வி.சேகர், தமிழக பாஜக தலைமை என்னை, கட்சி அலுவலகத்தில் கூட விட மறுக்கிறது, என்று திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
உண்மைதானாம்
இதுபற்றி பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, எஸ்.வி.சேகரை கட்சி அலுவலகத்திற்குள் வரக்கூடாது என தமிழிசை உத்தரவிட்டுள்ளது உண்மைதான் என கூறுகிறார்கள். பெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சனம் செய்யும்வகையிலான ஒரு பேஸ்புக் போஸ்ட்டை எஸ்.வி.சேகர் ஷேர் செய்திருந்தார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்தாலும், காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை மனதில் வைத்து, எஸ்.வி.சேகருக்கு பாஜக தலைவர் என்ற முறையில் இந்த தண்டனையை தமிழிசை கொடுத்துள்ளாராம்.
ஏதோ தன்னால் முடிந்தது
தமிழிசை பாஜக தமிழக தலைவராக இருந்தாலும், அவர் பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் கட்சி தலைமை எடுத்துவிடுவது கிடையாது. எனவே தன்னால் முடிந்த அளவுக்கான அதிகாரங்களை பிரயோகிக்கிறார். அதில் ஒன்றுதான் எஸ்.வி.சேகரை கட்சி அலுவலகத்திற்குள் விடாத முடிவும் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில். ம்.. நடக்கட்டும்!