தமிழக மக்களிடம் எனக்கு ஒரு சின்ன ஆதங்கம் இருக்கு.. உருக்கமாக பேசிய தமிழிசை!
சென்னை: தமிழகத்து மக்களிடமும் எனக்கு சின்ன ஆதங்கம் உள்ளது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பாஜகவின் தமிழக மாநில தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் ஆளுநராக பதவியேற்று ஓராண்டு நிறைவு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசையும் அவரது கணவர் சவுந்திரராஜனும் கலந்து கொண்டார்கள்.
தெலுங்கானா ஆளுநர்
முன்னதாக தெலுங்கானா ஆளுநராக தனது பயணத்தை புத்தக வடிவில் வெளியிட்டார் தமிழிசை சவுந்திரராஜன். இதையடுத்து அவர் பேசுகையில் தமிழின் மகள்நான். அதன் பிறகு தான் தெலுங்கானாவின் சகோதரி. அதனால்தான் தமிழகத்தில் முதல் நிகழ்ச்சியை நான் நடத்துகிறேன்.
தேர்வு
அனைவரின் அன்பையும் சேர்த்து வைத்த பின்னர்தான் நான் தெலுங்கானாவுக்கு சென்றேன். தெலுங்கானா ஆளுநராக என்னை தேர்வு செய்யப்பட்டது ஒரு அதிர்ச்சிதான். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. என் மீதான விமர்சனம் தான் இவ்வளவு இளைய பருவத்தில் எப்படி ஆளுநராக இவர் இருப்பார் என இருந்தது.
மக்கள் பவன்
இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு இளைய வயதுடையவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக எவ்வாறு செயல்படுவார் என பல்வேறு விமர்சனங்கள் நான் பொறுப்பேற்ற முதல் நாளே வந்தன. கொரோனா காலகட்டத்தில் தெலுங்கானா ராஜ்பவன் எனக்கு மக்கள் பவனாக இருந்தது.
உயர்பதவி
தமிழக மக்களிடமும் எனக்கு ஒரு சின்ன ஆதங்கம் உண்டு. ஏனெனில் என்னை மக்கள் சரியாக அங்கீகரிக்கவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உண்டு. ஆளுநர் என்று அழைப்பதை விட அக்கா என்றுதான் என்னை பெரும்பாலானோர் அழைப்பார்கள். அரசியலில் ஒரு பெண் உயர்பதவியை அடைவது சாதாரணம் கிடையாது.
பெண் தலைவர்
பல இரவுகள் தூங்காமல் இருந்துள்ளேன். பெண் தலைவராக இருக்கிறார் என்று அந்த கட்சி சறுக்கிவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். பாஜகவின் அதிக நாட்கள் தலைவராக இருந்த பெருமை என்னை மட்டும்தான் சேரும். என்னை குள்ளம் என சொன்னார்கள், ஆனால் நான் எனது எண்ணத்தாலும் உள்ளத்தாலும் உயர்ந்துள்ளேன். என்னிடம் ஒரு வேளை கொடுத்தால் எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதை முழு ஈடுபாட்டோடு செய்து முடிப்பேன் என தமிழிசை தெரிவித்தார்.