தினமும் சூரியன் உதிக்குது.. அதை மறைப்பீங்களா.. உடம்பிலிருந்து கையை அகற்றுவீர்களா? தமிழிசை காட்டம்
சென்னை: "இப்படின்னு கை காட்டினால் தேர்தல் சின்னம் என்று நினைத்து கையை அகற்றுவிடுவீர்களா? தினமும்தான் சூரியன் உதிக்குது, அதை மறைப்பீர்களா" என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைபவ நிகழ்ச்சிக்காக தாமரை வடிவிலான கோலங்கள் வரையப்பட்டு இருந்தன.
சுண்ணாம்பு கலவையால் இதை வரைந்திருந்தார்கள். ஆனால் இதை பார்த்த தேர்தல் அதிகாரிகள், கட்சி சின்னமென கருதி அதை வெள்ளை சுண்ணாம்பு கொண்டு வந்து பூசி மறைத்தார்கள்.
கோவை எஸ்பி மீது நடவடிக்கை.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. ஹைகோர்ட் தடாலடி உத்தரவு
கோபம்
தாமரை கோலத்தை மறைத்ததும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. இதனால் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது:
தாமரை கோலம்
"ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பொதுமக்களால் வழக்கப்படி ஆண்டாண்டு காலமாக வரையப்படும் தாமரை கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம். மஹாலஷ்மி அமர்ந்திருக்கும் தாமரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல.
சூரியன் உதிக்கிறது
அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா? இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து அமைப்புகள்
அது மட்டுமல்லாது, இப்படி கோலத்தை அழித்துள்ளது இந்து அமைப்புகளையும் காயப்படுத்தி உள்ளது. அதனால் இது சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க போவதாகவும், கண்டன போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளனர்.