அப்பா பேசலையே.. கண் கலங்கிய மகள்.. "குமரி"யாரையே மிஞ்சிய "குமாரி" விஸ்வரூபம் எடுத்த கதை!
அரசியலில் குமரி அனந்தனை தமிழிசை சவுந்தராஜன் மிஞ்சிவிட்டார்
Recommended Video
சென்னை: தமிழகம் மட்டுமே அறிந்த தமிழிசை இன்று.. அகில இந்திய அளவில் உற்று நோக்கப்பட்டு வருகிறார். இதனால் தந்தையையும் தாண்டி விஸ்வரூபத்தை எடுத்துள்ளார் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன்!
1992-ம் ஆண்டு... 45 நாள் தனது தந்தை பாதயாத்திரை போனபோது, கட்சிக்காரர்களுக்கு மருத்துவ உதவி செய்ய கைக்குழந்தையை தூக்கிகொண்டு, கூடவே சென்றார் தமிழிசை. ஓடி ஓடி அப்பாவுக்காக வாக்கு கேட்டார். ஆனால் அப்போது தமிழிசை ஒரு காங்கிரஸ் உறுப்பினர்கூட இல்லை. தந்தையின் பேச்சால் எவ்வளவு மயங்கி விழுந்தாரோ, அதே அளவுக்கு ஈர்ப்பு வாஜ்பாய் பக்கமும் தன்னையும் அறியாமல் தமிழிசைக்கு ஏற்பட்டது.
பாஜகவின் உறுப்பினர் ஆனார்.. "அதிகபிரசிங்கத்தனம் எதற்கு" என்று தந்தையின் கோபத்துக்கு ஆளானார். 6 மாதம் பேசவே இல்லை குமரி அனந்தன். அப்பா பேசலையே என்று மனம் நொந்து போனார் தமிழிசை. பெரிய பிளவு மனதை பிசைந்தது. 1996-ல் "பாப்பாவை அரசியலுக்கு கூட்டிட்டு வந்துடுங்கன்னு" மூத்த தலைவர் யசோதா, குமரி அனந்தனிடம் சொல்லவும் கொதித்தே போய்விட்டார்.
"ஏன் அப்படி சொன்னே.. அப்படி சொல்ல கூடாதும்மா.. வற்புறுத்திய தாய்.. பூரிக்க வைத்த மகள் தமிழிசை
வாரிசு
"நான் இருக்கிற வரைக்கும் அது நடக்காது, எனக்கு வாரிசு அரசியல் பிடிக்காது, அதனால என் பொண்ணை வாரிசாக கொண்டு வர மாட்டேன்" என்று சொன்னார். ஆனாலும், தமிழிசையின் தேசியத்தின் மீதான ஈர்ப்புக்கு தடை போட முடியவில்லை. அதே நேரத்தில், தந்தையையும் மீறி கட்சிக்குள் சென்ற தமிழிசையை யாரும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கவில்லை. வித்தியாசமான விலகல் பார்வையே விழுந்தது. பாஜக ஆபீசுக்குள் தமிழிசை நுழைந்தாலே, தங்களுக்குள் பேசிக் கொண்டிருப்பவர்களும் பேச்சை கப்பென்று நிறுத்தி விடுவார்களாம்.
விமர்சனங்கள்
பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த மகளை எல்லோரும் சந்தேகிக்கவே செய்தனர். எந்த ஒரு நடவடிக்கையிலும் ஏதோ உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகக் கண்களுக்கும், சர்ச்சை பேச்சுக்களுக்கும் ஆளானார். அப்போதும் சரி, இப்போதும் சரி.. விமர்சனங்களை தாங்கி கொள்ள பழக்கப்படுத்தியது அன்றே கண்ணியத்துடன் தமிழிசையை குமரியார் வளர்த்தவிதம்தான்!
15 வருட காத்திருப்பு
ஒரு மாவட்ட தலைவர் என்ன சொன்னாலும் சரி, அந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார் புகழ்பெற்ற டாக்டராக உயர்ந்திருந்த தமிழிசை. இதை தந்தை குமரியாரும் பலமுறை கவனித்து மனதுக்குள் வருத்தப்படவும் செய்திருக்கிறார். கட்சிக்கு உண்மையானவர்தான்.. நான் விசுவாசமானவர்தான்.. என்பதை மேலிடம் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் 15 வருடங்கள் ஆயிற்றோ என்னவோ.. அதன்பிறகுதான் மாநில தலைவர் ஆனார் தமிழிசை.
அதல பாதாளம்
தமிழிசை பொறுப்பேற்ற நேரம், தமிழக பாஜக அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருந்தது. ஆர்எஸ்எஸ் என்ற பிடிக்குள் சிக்கி கொள்ளாமல், தன்னையும் தற்காத்து, கண்ணியத்தையும் இழக்காமல், கட்சிக்கும் பங்கம் வராமல் சரியான நேர்க்கோட்டு விகிதத்தில் பயணிக்க தமிழிசையால் மட்டுமே முடிந்தது. தமிழகத்தில் மக்கி கிடந்த பாஜகவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது தமிழிசைதான்.. பாஜகவின் மக்கள் விரோத போக்கு அறிவிப்புகளுக்கு எல்லாம் கல்லடி பட்டு காயம் ஆனதும் தமிழிசைதான்.
நியமனம்
மாநில அளவில் கட்சிக்கான தன் பங்கு என்ன, பொதுக்கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கைகள் உட்பட ஒவ்வொரு மாத ரிப்போர்ட்டையும் டெல்லிக்கு அனுப்பிவைத்து தலைமையின் எந்த கண்டிப்பு சொல்லுக்கும் ஆளாகாமல் தன்னை பார்த்து கொண்டவர் தமிழிசை. அதனால்தான், திரும்பவும் பாஜக தலைவராக தமிழிசையே நியமனமாகிவிட்டால், தங்களின் நிலை என்னாகுமோ என்ற சக தலைவர்களின் புலம்பல்கள், அடுக்கப்பட்ட பொய் புகார்களை கூட தலைமை பரிசீலனைக்குகூட எடுத்து கொள்ளவேயில்லை.
புதிய அத்தியாயம்
தமிழிசையின் ஒட்டுமொத்த உழைப்பு, விசுவாசத்தை புதிய பதவி தந்து பாஜக தலைமை கவுரவித்துள்ளது. இன்று தமிழக மக்கள் இல்லாமல், பிற மாநில மக்களும் தமிழிசையை உற்று நோக்க தொடங்கி உள்ளனர். தமிழிசை இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்த புதிய அத்தியாயத்தை துவக்கி உள்ளார்.
அடையாளம்
எத்தனையோ காழ்ப்புணர்ச்சிகள், கல்லடிகளுக்கு கிடைத்த பரிசாக இதை நினைத்தாரோ என்னவோ, தமிழிசையின் கண்கள் நேற்று சந்தோஷத்தில் கலங்கி காணப்பட்டது. "தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய திறனுக்கும், உழைப்புக்கும் மதிப்பளிக்கப்பட்டுள்ளது வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை" என்று நேற்று தெரிவித்திருந்தார்.
குமரி அனந்தன்
இந்நிலையில், மகளை தலையில் கை வைத்து.. மனப்பூர்வமாக வாழ்த்தி உள்ளார் தந்தை. இது எத்தனை கால இடைவெளியாக இருந்தாலும், தந்தையின் வாழ்த்து தமிழிசைக்கு உசத்திதான்! குமரி அனந்தன் மகள் என்று அறியப்பட்டவர், இன்று தமிழிசையின் தந்தை இவர்தான் என்ற அடையாளத்தை பெற்று தந்துள்ளார். அரசியலில் தந்தையை வீழ்த்தி இருந்தாலும், என்றுமே இவர் குமரியாரின் மகளாகவே நம் கண் முன் நிறைந்து இருக்கிறார்!