நீ தான் காரணம், நான் இல்லை நீ தான்.. நீட்டை வைத்து ரொம்ப நீட்டா பண்றாங்கப்பா அரசியல்!
நீட் தேர்வு குறித்து முக ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தராஜன் பதிலளித்துள்ளார்
சென்னை: நீட் தேர்வை தமிழ்நாட்டில் இல்லாமல் செய்கிறார்களோ இல்லையோ, இந்த நீட் தேர்வை உண்மையிலேயே யார்கொண்டு வந்தது என்பதுதான் இப்போதைக்கு திமுக- அதிமுகவிடையே பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் சில பிரச்சனைகள் திடீரென்று தலைதூக்கும், சில சமயங்களில் கிணத்தில் போட்ட கல்லு மாதிரி அமுங்கி போய்விடும். அப்படிப்பட்ட ஒரு பிரச்சனைதான் நீட் தேர்வு.
சட்டசபையில் 2 நாளைக்கு முன்பு இந்த விவகாரம் கிளப்பப்பட்டது. அப்போது நீட் தேர்வு மசோதா விவகாரத்தில் சிவி சண்முகம் - முக ஸ்டாலின் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
கம்யூனிஸ்ட் தாத்தாவின் பேரன் என்பதை நந்தினியின் கரம்பிடித்து நிரூபித்த குணாஜோதிபாசு
சிவி சண்முகம்
அப்போது, நீட் விவகாரத்தில் தான் கூறியதில் தவறு இருப்பதை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று சவால் விடுத்த அமைச்சர் சண்முகம், அதேபோல் ஸ்டாலின் சொல்வதில் தவறு இருப்பதை நிரூபித்தால் அவர் பதவி விலக தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அமைச்சரின் பதில் திருப்தியில்லை என சொல்லி திமுக வெளிநடப்பு செய்தது.
ஐகோர்ட்
இதை தவிர "திமுக ஆட்சியின் போது சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடை பெறப்பட்டது, திமுகஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. குடியரசு தலைவர் ஒப்புதல் பெறமுடியாமல் நீட் தேர்வை பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான்" என்று நேற்றுகூட ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தமிழிசை
"பாஜகவுடன் கூட்டணி வைத்து" என்று சொன்னதும் தமிழிசை ஸ்டாலினுக்கு பதில் சொல்லி உள்ளார். இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "முதன்முதலில் நீட் தேர்வு அறிமுகமானது காங்.திமுக கூட்டணியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில்தானே. வேலூர் சிஎம்சி கோர்ட்டுக்குப் போனதால் முதல் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதுதான் உண்மை வரலாறு" என்று பதிவிட்டுள்ளார்.
|
அமைச்சரவை
"உண்மை வரலாறு" என்பதை பலமுறை திமுகவும் சொல்லியே வருகிறது. ஆக மொத்தம் இந்த கேள்விக்கு இன்னும் பதில் இறுதி பதில் கிடைக்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒன்று, மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி, இருந்திருந்தாலும் சரி, அமைச்சரவை கூட்டி நீட் தேர்வு என்பது மாநிலங்கள் சம்பந்தப்பட்ட் முடிவு என்று ஒரு தீர்மானமோ, முடிவோ எடுத்திருந்தால், சுப்ரீம் கோர்ட்கூட தலையிட்டிருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். இதை யார் எடுக்க போகிறார்கள் என்பதில்தான் இதற்கான பதிலும் அடங்கி உள்ளது!