"கையில் இருப்பதைவிட கம்மியாதான் மக்களுக்கு பணம் தந்தாங்க" வாக்களித்து விட்டு கொளுத்தி போட்ட தமிழிசை
நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமர் ஆவார் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: "இந்த தேர்தல் திருநாளை கொண்டாடணும்.. நான் ஓட்டு போட்டுட்டேன்.. இப்போ தூத்துக்குடி கிளம்பறேன்" என்று சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பிறகு தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
இவ்வளவு நாளாக தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன். நேற்று முன்தினம்தான் பிரச்சாரம் முடிந்தது.
பளிச் புன்னகை.. வீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்!
வாக்கு சாவடி
இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு என்பதால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்தார். காலை 8 மணிக்கே தான் குடியிருக்கும் தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டார்.
தூத்துக்குடி கிளம்பறேன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்த தேர்தல் திருநாளை கொண்டாட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் குடியிருக்கும் தொகுதியிலேயே ஓட்டு போட்டுட்டேன். இப்போது தூத்துக்குடி கிளம்புகிறேன். அங்கே நிச்சயமாக வெற்றி பெறுவேன்.
வருமான வரி
இங்கேயும் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். தூத்துக்குடியில் தகவலின் அடிப்படையில்தான் வருமான வரி சோதனை நடந்தது. ஏராளமான பணப் பட்டுவாடா நடந்து உள்ளது.
குறைவான பணம்
ஆனால் என்ன கவலை என்றால் அவர்கள் வைத்திருக்கும் பணத்தை விட குறைவாகவே மக்களுக்குக் கொடுத்துள்ளனர் என்பதுதான்" என்று ஒரு போகிற போக்கில் ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு விட்டு கிளம்பிவிட்டார்.
போட்டோவுக்கு போஸ்
கனிமொழி வீட்டில் நடந்த ரெய்டு குறித்த கேள்விக்குத்தான் இப்படியொரு பதிலைக் கொடுத்தார் தமிழிசை. தமிழிசையுடன் அவரது கணவர் டாக்டர் செளந்தரராஜனும் ஓட்டுப் போட வந்திருந்தார். பின்னர் தம்பதி சமேதராக இருவரும் போட்டோவுக்குப் போஸ் கொடுத்து விட்டுக் கிளம்பிச் சென்றனர்.