ஜெ.வை அடித்து உதைத்தவர்களாச்சே.. வெற்றிகொண்டான் பேசாத பேச்சா.. திமுகன்னாலே .. தமிழிசை அதிரடி
ராதாரவி விவகாரம் கண்துடைப்பு நாடகம் என்று தமிழிசை சவுந்தராஜன் திமுகவை விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "ஜெயலலிதாவையே சட்டமன்றத்துக்குள் அடித்து உதைத்தவர்கள் திமுகவினர்தான்.. திமுக பேசின பேச்சை எல்லாம் அச்சில் கூட ஏற்ற முடியாது. ஆனால் இன்னைக்கு ராதாரவி விஷயத்தில் தேர்தல் காலத்து நாடகத்தை நடத்துகிறது" என்று தமிழிசை மிக காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சித்துள்ளார்.
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு சர்ச்சையாக உருவெடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் திரையுலகினர் ராதாரவிக்கு எதிராக பல கண்டனங்களை பதிவு செய்தனர்.
பெரிய விவகாரமாக இது உருவானதால், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக அவரை நீக்கி உள்ளதுடன், ராதாரவியின் பேச்சுக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். திமுகவின் இந்த செயலுக்கு கமல் உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
அமமுகவிற்கு பொது சின்னம்.. வேட்பாளர்களை சுயேச்சையாக கருத வேண்டும்.. உச்சநீதிமன்ற உத்தரவு முழு விவரம்
சரமாரி விமர்சனம்
ஆனால் இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேர்எதிரான கருத்துக்களை பதிவு செய்ததுடன், திமுக மீது சரமாரியான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது சம்பந்தமாக தனது ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
|
திமுகவின் வாடிக்கை
"நயன்தாராவை பற்றிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது. அதற்காக ராதாரவி நீக்கம் என ஸ்டாலின் அறிவிப்பு ஒரு தேர்தல் நேரத்து நாடகம்.ஏனென்றால் ராதாரவி என்னைப்பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் பலஆண்டுகளாக திமுக மேடைகளில் இருந்து வந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? பெண்மையை பழிப்பது திமுகவின் வாடிக்கை
|
அடித்தவர்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அந்நாள் முதல்வர் முதல் கழகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் வரை பேசிய பேச்சுக்கள் அச்சில் ஏற்றமுடியாத தரம்? என்பதை நாடறியும். ஜெ.அவர்களை சட்டமன்றத்தினுள்ளே அடித்து உதைத்தவர்கள் திமுகவினர். நீங்கள் செய்வது தேர்தல் காலத்து நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
|
நெட்டிசன்கள் கேள்வி
தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு கீழே பல்வேறு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, "ரொம்ப அருமையா சொன்னீங்க.. கண்டிப்பா திமுக நாடகம் ஆடுது, மறுக்க முடியாது.. ஆனா சேகரும் ஹெச்.ராஜாவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசிய போது நீங்கள் அதிகபட்சம் கட்சி தலைவராக ஒரு பெண்ணாக என்ன செய்தீர்கள்??" என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
விமர்சனங்கள்
"எச். ராஜா கனிமொழியை பற்றி விமர்சிக்கும் போது உங்கள் கட்சி சார்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சொல்லிவிட்டு அடுத்தவங்களுக்கு வகுப்பெடுங்க" என்று மற்றொருவர் சொல்கிறார். தமிழிசை சொல்வது ஒரு வகையில் நியாயம் என்றால், நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விகளும் நூற்றுக்கு நூறு சரியே!