என்ன ஆச்சு தமிழிசைக்கு.. ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்.. தேர்தல் தோல்வி இப்படியெல்லாமா மாற்றும்!
தமிழிசை சவுந்தராஜன் திமுக எம்பிக்கள் குறித்து ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: என்ன ஆச்சு தமிழிசைக்கு.. ஏன் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்.. தேர்தல் தோல்விதான் இவரை இந்த அளவுக்கு மாற்றிவிட்டதா என தெரியவில்லை.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் சில தினங்களுக்கு முன்பு, வெற்றி பெற்ற 37 திமுக எம்பிக்களை பார்த்து "காதறுந்த ஊசிகள்? தைக்கப் பயன்படுமா? குத்திப் பார்க்கலாம்? அவ்வளவுதான்? இதுதான் தமிழகத்தில் வெற்றி பெற்ற எம்பிக்களின் நிலைமை.? குரல் கொடுக்கலாம்? வெளிநடப்பு செய்யலாம்? கோரிக்கை மனு கொடுத்து படம் காட்டலாம்? அவ்வளவே. ஆணையிடும் அதிகாரம் யாரிடம்? இருந்தாலும் தமிழகத்தின் தேவைகளை பாஜக நிறைவேற்றும்" என்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.
வெற்றி பெற்ற 37 பேரும் திமுக தலைவர் ஸ்டாலினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இவர்கள் எல்லோருமே மக்கள் ஓட்டு போட்டுதான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அதனால் தமிழிசையின் அந்த ட்வீட்டிற்கு நிறைய கண்டனங்கள் எழுந்தன.
|
தேர்தல் தோல்வி
எனினும், தேர்தல் தோல்வியால், அல்லது ஆதங்கத்தினால் தமிழிசை இப்படி ஒரு ட்வீட் போட்டிருப்பார் என்றுகூட எடுத்து கொள்ளலாம். ஆனால் இப்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார். இதில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. அந்த ட்வீட் இதுதான்:
இழப்பு?
"கார்த்தி.சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு.. கலாநிதிவீராசாமி-ராஜ்நாத் சிங்கிடம் மனு .. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு! தயாநிதி தென்னக ரயில் ஆபிசில் மனு! அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல்! பாஜகவை தோற்கடித்த தமிழகம்? இழப்பு???" என்று பதிவிட்டுள்ளார்.
எம்பிக்கள்
இதன் அர்த்தம் என்ன? ஒரு மாநில பிரச்சனையை கோரிக்கையாகத்தானே அரசிடம் வெளிப்படுத்த முடியும்? எங்கேயோ டெல்லியில் இருப்பவர்களுக்கு நம்ம ஊரில் நடக்கும் பிரச்சனைகைளை எப்படி கொண்டு செல்வது? யாரிடம் கோரிக்கை மனுவை தருவது? தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் மத்திய அரசிடம்தானே மனுவை தர முடியும்?
திருமாவளவன்
அப்படியே இவர்கள் கோரிக்கை வைப்பதும் நம்ம தமிழகத்துக்கு தானே? கோரிக்கையை தயாநிதி வைத்தால் என்ன, திருமாவளவன் வைத்தால் என்ன? தமிழிசை வைத்தால் என்ன.. நமக்குதானே அந்த நன்மை வந்து சேர போகிறது?
பாஜக ஆட்சி
தமிழ்நாட்டுக்கும் மோடிதானே பிரதமர்? பாஜக தரப்பினர் மனு கொடுத்தால்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? மக்களின் பிரஜை யார் கொடுத்தாலும் அது கிடப்பில் போடப்படுமா? அல்லது பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களிலும் இதுநாள்வரை இப்படித்தான் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றனவா?
இதுதான் அழகா?
இத்தனை காலம் தமிழக பாஜக பொறுப்பில் இருந்துகொண்டு, எந்தவொரு முக்கியமான திட்டத்திற்காகவாவது மத்திய அரசுக்கு நெருக்கடி தந்ததுண்டா, அப்படி வலிமையான ஒரு திட்டம் தமிழ்நாட்டுக்கு வந்ததுண்டா? தானும் செய்யாமல், அடுத்தவர்களையும் செய்யவிடாமல் தடுப்பது தமிழிசைக்கு அழகல்ல. யார் செய்தாலும் நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறதா என்பதை பார்ப்பதே சிறந்த தலைமைக்கு அழகு!