அப்ரூவரான இந்திராணி முகர்ஜி.. 'சிதம்பர' ரகசியங்கள் வெளியாகும்.. தமிழிசை பூடக டிவீட்!
ஐஎன்எக்ஸ் நிறுவன வழக்கு குறித்து தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: அப்ரூவராக இந்திராணி முகர்ஜி மாறி உள்ளதால், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சம்பந்தமான வழக்கில் பல "சிதம்பர ரகசியங்கள்" வெளியாகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான நிறுவனம். இதில், 2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் இருந்தபோது, மத்திய நிதியமைச்சராக ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனாலும் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட எப்ஐஆரில் சிதம்பரம் பெயர் சேர்க்கப்படவில்லை. ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சிதம்பரத்தையும் கைது செய்து விசாரிக்க சிபிஐ நினைத்தும் அதற்கு டெல்லி கோர்ட் தடை பண்ணியது.
அனுமதி
அதனால் மத்திய அரசுக்கு சிபிஐ ஒரு லட்டர் அனுப்பி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கடிதம் வாங்கிவிட்டது. இப்போது, ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இருவருமே விசாரணை வளையத்துக்குள் உள்ளனர்.
|
அப்ரூவர்
இந்த சமயத்தில்தான், ஜெயிலில் உள்ள இந்திராணி அப்ரூவராக மாறி உள்ளார். இது சம்பந்தமான மனுவில், "எப்படியாவது இந்த வழக்கில் இருந்து மன்னித்து விடுவித்து விடுங்கள், குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறேன், விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சிக்கல்
இந்திராணியின் இந்த வாக்குமூலத்தை கோர்ட்டும் ஏற்றுக் கொண்டுவிட்டது. அப்படியானால், சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ரெண்டு பேருக்குமே இனி சிக்கல்தான் ஏற்படும். எப்படியும் பல விவகாரங்களை இந்திராணி வெளிப்படுத்தவே செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிதம்பர ரகசியம்
இந்த விஷயத்தைதான் தமிழிசை சவுந்தராஜன் சூசகமாக எடுத்து ட்வீட் போட்டுள்ளார். "சிதம்பர ரகசியங்கள் விரைவில் அம்பலம்?" என்று ஒற்றைவரி பதிவு போட்டுள்ளார். அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி என்ன சொல்ல போகிறார், யாரை காட்டி கொடுக்க போகிறார் என்பது தெரியாவிட்டாலும், ராபர்ட் வதேரா விஷயத்தில் பாஜக தலைமை என்ன செய்தது என்பதைதான் தமிழிசையை திருப்பி கேட்க வேண்டி உள்ளது.