'கார்ப்பரேட் பட்ஜெட்'.. திமுகவே ஒரு குடும்ப கார்ப்பரேட் கம்பெனிதானே.. போட்டு தாக்கும் தமிழிசை!
முக ஸ்டாலினின் கருத்துக்கு தமிழிசை சவுந்தராஜன் பதிலடி தந்துள்ளார்
சென்னை: ஸ்டாலின் அறிக்கை வரும் முன்னே.. தமிழிசை கமெண்ட் வரும் பின்னே.. என்றே நிலைமை ஆகிவிட்டது.
திமுக தலைவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும் சரி, கருத்து சொன்னாலும் சரி, அதற்கு முதலடி, பதிலடி, தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் இருந்துதான் வரும். அந்த வகையில் நேற்றைய பட்ஜெட் குறித்த இருவர் பற்றின செய்திதான் இது.
"மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கவில்லை. மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும், மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது" என்று முக ஸ்டாலின் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழிசை, "தமிழ்நாட்டின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான திமுக தலைவர் பேட்டி. கழகம் ஒரு குடும்ப கார்ப்பரேட் கம்பெனிதானே?" என்று ட்வீட் போட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான திமுக தலைவர் பேட்டி. கழகம் ஒருகுடும்ப கார்ப்பரேட் கம்பெனிதானே? https://t.co/zPZVHQLbCc
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) July 5, 2019
கருணாநிதி குடும்பத்தில் பெரும்பாலானோர் மத்திய, மாநில அரசின் பதவிகளை வகித்து வருவதை யாராலும் மறுக்க முடியாதுதான். வாரிசு அரசியல் பலமாகவே வேரூன்றி விட்டதையும் இப்போதைக்கு யாராலும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாதுதான்.
இருந்தாலும், அம்பானியாக இருந்தாலும் சரி, டாட்டா, பிர்லாவாக இருந்தாலும் சரி, இவர்கள் தலைதூக்கியது மோடி அரசில்தான். அதேபோல, சில கார்ப்பரேட் நபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதும் இதே மோடி அரசாட்சியில்தான் என்பதை தமிழிசை அறிந்திருக்கவே செய்வார்!