"பாஜக ஒழிக".. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
பாஜகவுக்கு எதிராக தமிழிசை சவுந்தராஜன் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவரது மகன் பாஜக ஒழிக என்று கோஷம் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர்களில் அதிக அளவு கல்லடிகளை சுமந்தவர் தமிழிசை சவுந்தராஜன்தான். இருந்தாலும் நாகரீக அரசியலில் தன்னை முன்னெடுத்து செல்பவர். கட்சிக்கு மிகவும் விசுவாசமானவர். ஸ்டாலின் உட்பட எந்த தலைவருக்கும் பதிலடி தர தயங்காதவர்.
இந்நிலையில், திருச்சி செல்வதற்காக மகன், மகளுடன் தமிழிசை சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது வழக்கம்போல், அவரிடம் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளை கேட்டனர்.
சுகந்தன்
அவர்களின் கேள்விக்கு தமிழிசை பதிலளித்து கொண்டிருந்த சமயம், திடீரென்று அவர்களின் பின்னால் நின்று கொண்டு இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் மகன் சுகந்தன் பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் பாஜக தோற்றது என்று சுகந்தன் சத்தமாக சொன்னார். இதனால் அங்கிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
வாக்குவாதம்
இதனால் தமிழிசையின் உதவியாளர் மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள் மகனை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றார்கள். அதன் பிறகு சென்னை விமான நிலையத்திற்குள் சென்ற தமிழிசைக்கும், அவரது மகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பரபரப்பு
இதனால் திருச்சி பயணத்தை ரத்து செய்த தமிழிசை, மகனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சோபியா
ஏற்கனவே விமான நிலையத்தில் மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராகக் குரல் எழுப்ப, அவருக்கு எதிராக தமிழிசை வழக்கு தொடர்ந்திருந்தார். இப்போது, பெற்ற மகனே பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பி உள்ள நிலையில், பாஜக தலைமை என்ன செய்ய போகிறது என தெரியவில்லை. தமிழிசையின் மகன் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.