தாமரை மலர்ந்தது போல் முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
சென்னை: தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினார் தமிழிசை செளந்தரராஜன்.
அப்போது, பொங்கலோ பொங்கல்! பாதுகாப்பான பொங்கல், பாதுகாப்பான தடுப்பூசி பொங்கல், கொரோனாவை விரட்டும் பொங்கல் என தமிழிசை செளந்தரராஜன் முழக்கமிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது:
தாமரை மலர்ந்துடுமோ.. இப்படி பண்ணுங்க.. பாஜக போடும் கிடுக்கிப்பிடி.. சிக்காமல் தப்பிக்க திணறும் திமுக
பாதுகாப்பான ஆண்டு
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் பாதுகாப்பாக உள்ளோம். கடந்த ஆண்டு PANDEMIC YEAR இந்த ஆண்டு PROTECTIVE YEAR.
தடுப்பூசியில் அரசியல் வேண்டாம்
எந்த நாட்டையும் சாராமல் மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி. ஒரு தாய் 10 மாதங்களாக குழந்தை பெற்றடுப்பது போன்று நம் நாட்டின் விஞ்ஞானிகள் நம்மை இரவு பகல் பாராமல் உழைத்து காத்தனர். இது நன்றி சொல்லும் தடுப்பூசி. நமது நாடு 150 நாடுகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தர உள்ளோம். தடுப்பூசி விவகாரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம்.
யாருக்கும் பக்க விளைவு இல்லை
அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து இந்த கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடித்துள்ளனர். நேற்று 2 லட்சம் பேர் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை.
முன்களப் பணியாளர்களுக்கு அவசியம்
முன் களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதே அவசியம். பிரதமரும், அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு தடுப்பூசி வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. மக்களோடு மக்களாக நானும் மாநிலத்தின் முதல் குடிமகன் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்வேன். தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.