கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலை குறைப்பீர்களா?.. சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி
சென்னை: கிராமப் புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா என சூர்யாவுக்கு தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசினார். அப்போது புதிய கல்விக்கொள்கை, அரசுப் பள்ளிகளின் அவலங்கள், நீட் நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் அவர் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில் புதிய கல்விக்கொள்கை குறித்து யாரும் கவலைப்படாமல், கவனம் செலுத்தாமல் உள்ளனர். இது நாடு முழுவதும் 30 கோடி மாணவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. புதிய கல்விக்கொள்கையில் ஓராசிரியர் பள்ளிகளை மூடும் பரிந்துரையை கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. இது ஏற்கப்பட முடியாதது.
ஆச்சரியம்
பள்ளிகளை மூடும் கஸ்தூரி ரங்கன் பரிந்துரை தவறானது. பள்ளிகளை மூடினால் மாணவர்கள் எங்கே போவார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட பரிந்துரைத்துள்ளனர். இது ஆச்சரியமாக உள்ளது. ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளைத் திணிக்கக் கூடாது. மாணவர்களால் அதை படிக்க முடியாது.
அரசுப் பள்ளிகள்
மேலும் 5ம் வகுப்பில் அரசுத் தேர்வு என்று பரிந்துரைத்துள்ளனர். அப்படி செய்தால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும். யாரும் படிக்க மாட்டார்கள். நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகள் இல்லை. போதிய ஆசிரியர்கள் இல்லை. பல மாணவர்கள் சிரமப்பட்டு படிக்க வரும் நிலையே உள்ளது. அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை.
எத்தனை நுழைவுத் தேர்வுகள்
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் இதை எதிர்க்காவிட்டால் அவர்கள் மீது இது திணிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களால் எத்தனை நுழைவுத் தேர்வுகளுக்குப் படிக்க முடியும். எங்கு போய் படிப்பார்கள்.
பயன் தரவில்லை
நுழைவுத் தேர்வை வைத்து தனியார் பயிற்சி நிறுவனங்கள்தான் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர். கிட்டத்தட்ட ரூ. 45,000 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் புதிய கல்விக் கொள்கையானது மாணவர்களுக்கு பயன் தருவதாக இல்லை என்றார் சூர்யா.
சூர்யாவுக்கு கேள்வி
சூர்யா பேசியது மத்திய- மாநில அரசுகளுக்கு சாட்டை அடி போல் இருந்தது. சூர்யாவின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திரராஜன், கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைபபீர்களா. தங்கள் படத்தின் விளம்பரத்துக்காகவும் அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறார்களா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.