அப்பாய்ண்மென்ட் ஆர்டர் வந்திருச்சு.. எனக்கு எல்லாத்திலும் பாஸ் ஆகித்தான் பழக்கம்.. தமிழிசை
Recommended Video
சென்னை: தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான கடிதம் தற்போது வந்துள்ளதாகவும் பதவி ஏற்பு எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் தெலுங்கு மக்களின் சகோதரியாக தெலுங்கானா செல்கிறேன்.
இப்போது தான் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான கடிதம் வந்துள்ளது, செயலாற்ற வேண்டும் எல்லாவற்றிலும் பாஸ் ஆகித்தான் பழக்கம், இதிலும் சிறப்பாக செயல்படுவேன்.
தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்க உள்ள தேதி குறித்து ஆலோசனைகள் நடந்து வருகிறது. தெலுங்கானா மாநில முதல்வரின் தேதி, மற்றும் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் தேதிகள் கிடைக்க வேண்டும். அதற்கான தகவல் பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு செய்த பின்னர் உங்களிடம் எப்பொழுது பதவி ஏற்பேன் என்பதை அறிவிப்பேன்.
எனக்கு ஆளுநராகும் வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் மற்றும் கோடான கோடி தமிழ் மக்களுக்கு, பாஜக தொண்டர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.