ஒரு ரஜினி படம் தோற்றால் அடுத்த படம் ஓடலையா.. அதுபோல பாஜக மீண்டு வரும்.. தமிழிசை வாவ்!
ரஜினி படங்களுடன் ஒப்பிட்டு தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக இந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அடுத்த தேர்தலில் மீண்டு வரும்" என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தலைவர்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது. அதிலும் பாஜக கோட்டை என கூறப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறி கொடுத்து விட்டு கடுமையான அதிருப்தியில உள்ளது.
தேர்தலில் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும், இனி பாஜக தன் குறைகளை களைந்து மேலே வரும் என்றும் அக்கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இன்னொரு பக்கம் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்து விடக்கூடாது என்று ட்வீட்களை போட்டு அவர்களை சமாதானப்படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வருகிறார்கள்.
வெற்றிகரமான தோல்வி
பாஜக தலைவர்கள் இவ்வாறு செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இது "ஒரு வெற்றிகரமான தோல்வி" என்று புது விளக்கத்தை அளித்தார். அத்துடன் மோடி அலை ஓயவே இல்லை என்றும் உறுதிப்பிடிப்புடன் சொல்லி வருகிறார்.
இன்னொரு படம் ஓடுகிறது
இந்த 5 மாநில தேர்தல் சம்பந்தமாக செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தராஜன் பேசியபோது, திடீரென ரஜினியை ஒப்பிட்டு பேசினார். தமிழிசை சொன்னதாவது: "ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படம் ஓடவில்லை என்றால் அவரது செல்வாக்கு சரிந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். அவரது இன்னொரு படம் வெற்றி பெறுகிறது.
மீண்டு வரும்
அதிலிருந்து ரஜினி மறுபடியும் மீண்டு வரவில்லையா? அதுபோலதான் அரசியலும். அதுபோலதான் பாஜகவின் சறுக்கலும். இது ஒரு சின்ன சறுக்கல். அவ்வளவுதான். ஆனால பாஜக மீண்டு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ரஜினிக்கு பதிலடியா?
2 தினங்களுக்கு முன்பு 5 மாநில தேர்தல் குறித்து ரஜினி கருத்து சொன்னபோது, பாஜக தனது செல்வாக்கை இழந்து விட்டதாகவும், இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவு என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழிசை சவுந்தராஜன் அளித்துள்ள உதாரணம் ரஜினிக்கான பதிலா? அல்லது தன்னம்பிக்கைக்கான விளக்கமா? என தெரியவில்லை.