காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லையே.. எதுக்கு பதில் சொல்லணும்.. தமிழிசை பொளேர்!
காயத்ரி ரகுராம் கட்சியிலேயே கிடையாது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: "காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை... வேணும்னா டெல்லிக்கே போய் அவர் புகார் சொல்லிக்கட்டும்" என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
3 நாளுக்கு முன்பு ஒரு பார்ட்டிக்கு போய் நள்ளிரவில் காரில் திரும்பி வந்த காயத்ரி ரகுராடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுதான் குடிபோதையில் காரை ஓட்டினார் என்றும், இதற்காக போலீசார் ஃபைன் கேட்டார்கள் என்றும் தகவல்கள் தீயாக பரவின.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் காயத்ரி. அதில், "தன்மீது இதுபோன்ற அவதூறு பரப்பப்படுவதற்கு தமிழக பா.ஜனதாவில் நிலவும் உள்கட்சி பூசலே காரணம்" என்று குற்றம் சாட்டியிருந்தார்.
சலசலப்பு
வெறும் குடிபோதை என்று சொல்லப்பட்ட புகார், பின்னர் காயத்ரியின் இந்த புகாரினை அடுத்து மேலும் பரபரப்பாக்கி விட்டது. ஏனெனில், காயத்ரி ரகுராம் பா.ஜகவின் இளைஞர் அணியில் இருப்பதாலேயே அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டுபண்ண ஆரம்பித்தது.
கட்சியில் இல்லை
இதை பற்றி தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "காயத்திரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை" என்றார். உடனே காயத்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக தமிழிசைக்கு கோபமாக பதிலளித்தார்.
கேள்வி கேட்க கூடாதா?
அதில் "அன்புள்ள தமிழிசை மேடம், நான் பாஜனதாவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி மூலமாக. நீங்களாக யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன?
மோடிக்காக இருக்கிறேன்
நான் பா.ஜனதாவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை என்றார். காயத்ரியின் கோபமான இந்த பதில் குறித்து செய்தியாளர்கள் தமிழிசையிடம் திரும்பவும் கேட்டார்கள்.
அவசியம் இல்லை
அதற்கு தமிழிசை, "நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் கிடையாது. வேண்டுமானால் டெல்லியில் போய் புகார் சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்று சொல்லி கட்சியில் இருந்து விலகுவதாக அவர்தான் சொன்னார். எப்போதோ சொன்னாரோ அன்றே விலகியும் விட்டார். கட்சியில் ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று தெரிவித்தார்.
பொழுது ஓடட்டும்
இப்போது அடுத்த பிரச்சினைக்கு அடி போட்டாகி விட்டது.. அதாவது காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்காரா இல்லையா..!.. இதை வைத்து கொஞ்ச நாள் பொழுது ஓடட்டும் பாஜகவுக்கு!