அன்று ரஜினி மக்களை குழப்புகிறார்.. இன்று மக்களின் குரலாக ரஜினி.. தமிழிசையே கன்பியூஸ் ஆயிட்டாரே!
சென்னை: ரஜினிகாந்த் மக்களை குழப்புவதாக அன்று கூறிய தமிழிசை, இன்று ரஜினியின் குரல் மக்களின் குரலாகத்தான் ஒலிக்கிறது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழா கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில் அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன், அர்ஜூனனை போன்றவர்கள். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்றார்.
இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி
காஷ்மீர் விவகாரம்
ரஜினியின் கருத்துக்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் குரலாக ஒலிக்கிறார் ரஜினிகாந்த்.
ப சிதம்பரம்
அரசின் அனைத்து திட்டங்களையும் ரஜினிகாந்த் ஆதரிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை ரஜினி எதிர்த்திருக்கிறார். ஒரு கருத்துக்கு ஆதரவு தெரிவித்தால் உடனே கூட்டணி என முடிவு செய்துவிடக் கூடாது. மிகப் பெரிய பதவியில் இருந்த ப. சிதம்பரம் தமிழகத்துக்கு எந்த உதவியும் செய்ததில்லை என தெரிவித்துள்ளார் தமிழிசை.
ரஜினியை விமர்சித்த தமிழிசை
இன்று ரஜினியை பாராட்டும் இதே தமிழிசை சமயத்துக்கு ஏற்ப தனது கருத்துகளை மாற்றி வருகிறார். புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கூறுகையில் 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக் கொள்கை. ஆனால் அதை பற்றி அதிகளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை. 3 வயதிலிருந்தே மும்மொழிகளை கற்க வேண்டும் என திணிப்பது ஆபத்தானது என பேசியிருந்தார்.
சூர்யாவின் கருத்து சரியானது
சூர்யாவின் கருத்து பெரிய பேசுபொருளாக இருந்தது. இதற்கு பெரும்பாலானோர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனிடையே காப்பான் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவின் கருத்து சரியானது என பாராட்டியிருந்தார்.
மக்களை குழப்பும் ரஜினி
ரஜினி ஆதரவு குறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில் ரஜினி, சூர்யா போன்றோர் மக்களை குழப்புகிறார்கள் என தமிழிசை தெரிவித்திருந்தார். பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை ரஜினி கடைப்பிடித்தால் ரஜினியின் குரல் மக்களின் குரல் என்பதும் எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டால் ரஜினி மக்களை குழப்புகிறார் என்பதும் தமிழிசை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் கருத்தாக உள்ளது.