நாங்க அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லையே - தமிழிசை தடாலடி
Recommended Video
சென்னை: நாங்கள் அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவே இல்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் சிலர் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் சேர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார்.
அதில் பாரத பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே நீங்கள்தான் கொண்டு செல்ல வேண்டும். மோடி தொண்டர்களாக நீங்கள் மாறி தமிழகத்தில் தாமரையை மலர செய்ய வேண்டும்.
நல்லவர்கள்
சினிமா கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித்தான். அவர் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றார் தமிழிசை.
தீர்மானமாக உள்ளேன்
இந்த நிலையில் அஜித் நேற்றைய தினம் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். அதில் நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே.
அறிக்கை
என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம், சிலவருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான், என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது- என்று நான் சிந்தித்ததின் வீரியம் முடிவு அது என்று பாஜகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினரை சாட்டையால் அடித்தது போல் ஓர் அறிக்கையை அஜித் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அழைக்கவே இல்லையே
இது தமிழிசைக்கு அஜித் கூறிய பதிலடியாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் தனது நிலைப்பாட்டை நடிகர் அஜித் வெளியிட்டது பாராட்டுக்குரியது. ஆனால் நாங்கள் அஜித்தை பாஜகவுக்கு வருமாறு அழைக்கவே இல்லை.
உதவியவர் அஜித்
இளைஞர்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு அஜித் உதவி செய்தார். அதைத்தான் நான் பாராட்டினேன். பிற நடிகர்களைப்போல் அல்லாமல் நடிகர் அஜித்குமார் தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார் என தமிழிசை தெரிவித்தார்.