யோகி ஆதித்யநாத் தமிழகத்துக்கு வந்தால் பீட்டருக்கு என்னவாம்?.. முடிந்ததை செய்யுங்கள்- தமிழிசை சவால்
சென்னை: உத்தரப்பிரதேச முதல்வர் தமிழகத்துக்கு வந்தால் காங்கிரஸின் பீட்டர் அல்போன்ஸுக்கு என்னவந்தது என தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் நிலையில் மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு கூட்டணி பேரங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சென்னை பாஜக அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சந்திப்புக்கு முன்னர் நேற்று செய்தியாளர்களை தமிழிசை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு முன்பாகவே அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்துக்கு
கடந்த 2 முறை தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடியை கோ பேக் மோடி என ஹேஷ்டேக்கை சமூகவலைதளங்களில் உலவச் செய்தனர். ஆனால் வரும் நாட்களில் பிரதமர் தமிழகத்துக்கு வரும் போது மக்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள்.
காமெடி
தமிழக நலனுக்காக பல நல்ல திட்டங்களை மோடி செய்வார். தமிழகத்துக்கு நல்லது செய்ய வரக்கூடிய மோடிக்கு கருப்புக் கொடியா இல்லை வரவேற்பா என மக்களை நான் கேட்கிறேன். இடைக்கால பட்ஜெட்டை காமெடி என்று தெரிவிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்கள்தான் காமெடியாக உள்ளன.
நல்ல கூட்டணி
பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டு வருகிறது. யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்யப்பட்டபிறகுதான் கூற முடியும். தமிழகத்தில் பாஜக அங்கும் வகிக்கக் கூடிய கூட்டணி ஒரு நல்ல கூட்டணியாக இருக்கும்.
பீட்டர் அல்போன்ஸ்
12-ஆம் தேதி தூத்துக்குடி வரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி தரக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறி வருகிறார். அவரது கருத்து ஏற்புடையதல்ல.
தமிழிசை சவால்
யோகி ஆதித்யநாத் தமிழகத்துக்கு வருவதால் பீட்டருக்கு என்ன வந்தது. தூத்துக்குடிக்கு யோகி வருவார். பீட்டர் தன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும் என்று தமிழிசை சவால் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.