எல்லோரும் வாங்க ஒத்தைக்கு ஒத்தை.. நாங்களும் நிற்கிறோம்.. தமிழிசை அலேக் சவால்
அனைவரும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தனித்து நிற்கும் என தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார் என்று தமிழக பாஜகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும் இறுதியான கூட்டணி பற்றி ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்திருக்கிறார்.
காலத்தின் கட்டாயம்
இந்த நிலையில், கூட்டணி குறித்து சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார். ஆனாலும் கூட்டணி அமைவது தேவையானது, அது காலத்தின் கட்டாயம். வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை" என்று பதிலளித்தார்.
காங்கிரஸ் ராமசாமி
இதனிடையே இன்று சட்டசபையில் கூட்டணி சம்பந்தமான பேச்சு எழுந்தது. சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட தயாரா என்று அவையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.
நாங்களும் தயார்
இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்கும்போது, "அனைவரும் தனித்துப் போட்டியிட தயார் என்றால் அதிமுகவும் தனித்துப் போட்டியிட தயார்" என்றார்.
அதிமுக-பாஜக
ஒரே நாளில் பாஜகவின் தமிழிசையும், அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வமும் ஒத்த கருத்தை சொல்லி உள்ளது மக்கள் கவனத்தை திருப்பி உள்ளது