இன்னைக்குமா? மோடியை வரவேற்பது யார்? தமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடையால் பாஜகவில் பஞ்சாயத்து!
Recommended Video
சென்னை: தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதால் தமிழக பாஜகவில் பஞ்சாயத்து வெடித்துள்ளது
சீனா அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை விமான நிலையம் வருகை தருகிறார். அவரை வரவேற்க செல்வது யார் என்பதில் தமிழக பாஜகவில் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது.
வழக்கமாக பிரதமர் மோடி சென்னை வரும் போது தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர்களாக இருந்த 3 பேர், இளைஞரணித் தலைவர் வினோஜ், ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் 2 பேர் மற்றும் மூத்த தலைவர்களான பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் என குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி பெறப்பட்டிருந்தது.
தற்போது தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராகிவிட்டதால் ஏற்கனவே இருந்த புரோட்டாகால் ஒட்டுமொத்தமாக திடீரென மாற்றப்பட்டிருக்கிறதாம். குறிப்பாக தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவி ஏற்ற விழாவுக்குச் சென்ற அவரது ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் இப்போது மோடியை வரவேற்க வரக் கூடாது என போன் போட்டு தடை விதித்துள்ளனராம். சீனியர் பாஜக தலைவர் ஒருவரின் கைங்கர்யம்தான் இது எனவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜேபி நட்டாவிடம் புகார் தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர் தமிழிசை ஆதரவாளர்கள்.