1000 பேரின் உயிரிழப்பை தடுக்கவே 13 பேர் கொல்லப்பட்டனர்.. வைரலாகும் தமிழிசையின் பழைய பேச்சு
சென்னை: 1000 பேரின் உயிரிழப்பை தடுக்கவே 13 பேர் கொல்லப்பட்டனர் என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அவர் இப்போது தூத்துக்குடியில் போட்டியிடும் நிலையில் இந்த வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கோவை கொடிசீயா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்திய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலும் இந்த வீடியோவை சுட்டிக்காட்டியே பேசினார்.
தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் தங்கை கனிமொழி களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியை பொறுத்தமட்டில் இவர்கள் இருவருக்கிடையேதான் கடும் போட்டியே நிலவுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியை பொறுத்தமட்டில் அங்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக ஸ்டெர்லைட் விவகாரம் இருக்கும் என்பது கண்கூடு. கடந்த வருடம் மே மாதம் 22 ம் தேதி தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டாக்டர் முதல், தமிழகத்தின் முன்னணி பெண் அரசியல் தலைவர் வரை.. இவர்தான் தமிழிசை!
சுத்தமான காற்றும் நீரும் எங்களுக்கு வேண்டும் என்று 100 நாட்களுக்கு மேல் போராடியவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனு கொடுப்பதற்காக பேரணியாக வந்தபோது தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வது போல தமிழக அரசு சுட்டுக் கொன்றது. இதில் அப்பாவிகள் பலரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த விவகாரம் தூத்துக்குடி மக்களிடையே இன்னமும் ஆறாத ரணமாக உள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு அரசு சார்பில் உத்தரவிட்டது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை என்பதெல்லாம் இன்னமும் தெரியவில்லை. சம்பவம் நடந்த அன்று இவ்வளவு பேர் திரளுவார்கள் என்று காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள் ஆனால் பாவம் மாவட்ட ஆட்சித் தலைவருக்குத்தான் இவ்வளவு பேர் திரளுவார்கள் என்று தெரியாமல் ஜமா பந்தி நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். அரசும் அவரை அங்கிருந்து இடமாற்றம் செய்து அவருக்கு "மிகப்பெரிய" தண்டனையை கொடுத்து விட்டோம் என்று மனமகிழ்ந்து விட்டது. மாவட்ட ஆட்சித்தலைவராக அன்று ஜமா பந்திக்கு சென்றாரா அல்லது போக வைக்கப்பட்டாரா என்ற கேள்விக்கு இன்று வரை விடையில்லை. இது குறித்து பல ஆதாரங்களை முன்வைத்த சூழலியல் ஆர்வலர் முகிலனும் காணாமலேயே சென்று விட்டார்.
எச். ராஜாவை நான் சந்தித்தேனா? தேர்தலில் ஆதரவு அளிக்கிறேனா?.. மு.க அழகிரி அதிரடி விளக்கம்!
இப்படிப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களை தான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் மறக்காமல் குறிப்பிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் ஆளும் அதிமுகவும், பாஜகவும் என்று குறிப்பிடுகிறார். திமுக செயல்வீர்கள் கூட்டத்தில் இதை பேசிய கனிமொழி இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அவதூறாக பேசிய தமிழிசைதான் இங்கு வேட்பாளாராக வாக்கு கேட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழிசை திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் விவகாரத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டுள்ளார்.
அப்படியென்றால் பாஜக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் விவகாரம் இடம்பெறுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை பொறுத்திருந்து பாருங்கள் என்று குறிப்பிட்டார். இப்படி இரு கூட்டணிகளும் ஸ்டெர்லைட்டை மையபடுத்தியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்களை தவிர அங்கு களத்தில் உள்ள அமமுக, மநீம ஆகிய கட்சிகளும் ஸ்டெர்லைட்டையே குறிவைத்து வாக்கு சேகரிக்கின்றனர். ஆக தூத்துக்குடி மக்களின் ஆறாத ரணமும், தன் மக்களையே சுட்டுக் கொன்ற அரசின் செயல்பாடுகளும் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்பதுதான் யதார்த்தம்.