எதுவும் பேசப்படாது.. தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பூட்டு.. கட்சியில் இருந்து ஒதுங்குகிறாரா உசேன்?
சென்னை: எம்.ஜி.ஆர்.மன்ற பேரவைச் செயலாளரும், அதிமுக மூத்த உறுப்பினருமான தமிழ் மகன் உசேன் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டாராம்.
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் தன்னை நம்ப வைத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஏமாற்றிவிட்டதாக கருதுகிறாராம் அவர். முன்னாள் அமைச்சர் முகமது ஜானுக்கு ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டவுடன் கொதித்துப்போன தமிழ்மகன் உசேன், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து உட்கட்சி விவகாரங்களை புட்டு புட்டு வைக்க நினைத்துள்ளார்.
இதனால் பதறிப்போன மூத்த அமைச்சர் ஒருவர் தமிழ் மகன் உசேனை தொடர்பு கொண்டு, செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் அவர் அந்த முடிவை கைவிட்டாராம்.
ஆனால் இது தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய தமிழ் மகன் உசேன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கப்பட்டவுடன் முதல் ஆளாக தனிக்கட்சி தொடங்க தீர்மானம் போட்டு கொண்டு வந்தவன் நான். என்னையே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இப்படி கழுத்தறுப்பார்கள் என சற்றும் நினைக்கவில்லை என குமுறியுள்ளார்.
2 வருஷமா கோவா எம்எல்ஏக்களை பொத்திப் பொத்தி பாதுகாத்தேன்.. செல்லக்குமார் எம்பி
கடந்த முறை வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு தன்னை போட்டியிடக் கூறிவிட்டு கடைசி நேரத்தில் அன்வர் ராஜாவை இ.பி.எஸ். உள்ளே கொண்டு வந்ததையும் உசேன் மறக்கவில்லையாம். இது பற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, பாவம் தமிழ்மகன் உசேன் நிலைமை. எம்.ஜி.ஆரே. உசேனை வாய்யா செல்லப்பிள்ளை’என்று தான் உரிமையோடு அழைப்பார்.
அப்படிப்பட்டவர் இன்று எம்.ஜி.ஆர்.தொடங்கிய கட்சி மீது அதிருப்தி அடைந்திருக்கிறார் என்றால் அதற்கு அன்வர் ராஜாவும் ஒரு காரணம் எனக் காதை கடித்தனர். தனக்கு ராஜ்யசபா கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழ் மகன் உசேனுக்கு கிடைத்துவிடக்கூடாது என அவர் லாபி செய்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே இருவரும் கைகழுவப்பட்டார்களாம்.