தமிழகத்தில் இன்று 5,880 பேருக்கு தொற்று.. இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் உயிரிழப்பு கிடுகிடு
சென்னை: தமிழகத்தில் இன்று 5880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. உயிரிழப்பும் கவலை அளிக்கும் வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்துள்ள போதிலும், உயிரிழப்பு என்பது அதிகமாகவே உள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 5880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
பலி அதிகம்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 119 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 24 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.
குணம் அடைந்தவர்கள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,488 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா
சென்னையில் ஜூன் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக 1000த்திற்கு கீழ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,07,109 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 11606 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று பரிசோதனை
தமிழகத்தில் இன்று 65,189 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் 67,352 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.