எடப்பாடியார் அதிரடி சரவெடி அறிவிப்பு.. தேர்வு கிடையாது.. 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் "ஆல் பாஸ்"
சென்னை: நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா நோய் பரவ காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல், மாணவ மாணவிகள் வீடுகளிலிருந்து கல்வி கற்றனர்.
எனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்வு நடத்த முடியவில்லை.
பொதுத் தேர்வு ரத்து
கொரானா நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 11ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர்.
முதல்வர் அதிரடி
இந்த நிலையில்தான், இந்த கல்வியாண்டிலும், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து கல்வி
சுமார் 9 மாதங்களாக மாணவர்கள் வீடுகளுக்குள் இருந்து கல்வி கற்று வருகின்றனர். எனவே கடும் போட்டிக்கு இடையே மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத கூடாது என்பதற்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர். இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாதுகாப்பு அச்சம்
கொரோனா நோய் பரவல் காலத்தில் தேர்வு எழுத மாணவர்கள் பள்ளிக்குச் சென்றால் பாதுகாப்பு இருக்குமோ இருக்காதோ என்ற அச்சம் நிலவிய நிலையில் பெற்றோர்களுக்கு முதல்வரின் இந்த அறிவிப்பு தேன் போல காதில் பாய்ந்துள்ளது.
பெற்றோர் மகிழ்ச்சி
அதேநேரம் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் உள்ளிட்ட சில கல்வி நிறுவன அமைப்புகள் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ, பள்ளிக்கு செல்லாமல், பாஸ் ஆகப்போகிறார்கள் மாணவ மணிகள்.