2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 36.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..!
Recommended Video
சென்னை:2014ல் ஜெயலிலதா தலைமையில் அதிமுக 37 லோக்சபா தொகுதிகளிலும், 2019ம் ஆண்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக 36 தொகுதிகளிலும் முன்னிலை அளித்து, பாஜக எதிர்ப்பு என்பதை தமிழக மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகள் எக்சிட் போல் கணிப்பின் படியே பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வந்திருக்கிறது. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைக்கிறது. தமிழகத்தில் மீண்டும் பாஜக எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.
2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகளே அப்படியே லேசாக புரட்டி போட்டு எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆனால் தமிழகம் மட்டும் அதன் பாரம்பரிய மதவாத எதிர்ப்பு என்ற மரபணு இன்னும் இருக்கிறது என்பதை மெய்ப்பித்து இருக்கிறது.
அதிமுகவுக்கு 37
மோடியா.. லேடியா என்று ஜெயலலிதா 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடையே கேள்வி கேட்டார். லேடி தான் வேண்டும் என்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள், 37 தொகுதிகளை லட்டாக அள்ளி தந்தனர். அந்த தேர்தலில் திமுக மொத்தமாக வாஷ் அவுட்டானது.
37ல் திமுக
2019ம் தேர்தலிலும் அது அப்படியே மாறி வந்திருக்கிறது. இப்போது திமுக சார்பு நிலை... ஆனால் அதே மதவாத எதிர்ப்பு நிலை. 36 தொகுதிகளில் திமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். 2 தொகுதிகளில் மட்டும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறது.
ஆளுமையை மறந்த பாஜக
தமிழகத்தில் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமை மறைந்த பிறகு இருந்த வெற்றிடத்தை ஆளும் அதிமுக சரியாக நிரப்பவில்லை. ஆனால் அந்த இடத்தை தமக்கு தோதாக மாற்ற திமுகவும் தவறிவிட்டது என்று சொல்லலாம். இந்த இடைப்பட்ட கால கட்டத்தில் பாஜக தமது வலுவான ஆளுமையை செலுத்தும் வாய்ப்பை பெற்றது.
கோ பேக் மோடி ஹேஷ்டேக்
ஆனால்.... தனி ஆவர்த்தனம் என்பதை செய்யாமல் மரபணு மாற்றப்பட்ட பாஜக (அதாவது அதிமுக) என்ற பார்முலாவுடன் களம் இறங்கியது. அதை மக்கள் முற்றாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளாக காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், கஜா புயல் பாதிப்பு, மத்திய அரசின் பாரா முகம், கோ பேக் மோடி என பல விவகாரங்களை சொல்லலாம்.
மக்கள் பாதிப்பு
குறிப்பாக, கஜா புயல் தாக்கியதில் தமிழகத்தின் 12 மாவட்டங்கள் பாதிக்கப் பட்டு, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அதில் மத்திய அரசின் அணுகுமுறை, மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. மக்களிடையே தம்மை நிலைநிறுத்தி கொள்ள கிடைத்த அருமையான வாய்ப்பை பாஜக கோட்டை விட்டது.
மாறாத அணுகுமுறை
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, விவசாயிகள் பிரச்சனை என பல முக்கியமான பிரச்னைகளில் களம் புகுந்து மக்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்ற அரசியல் புரிதலை பாஜக கையாள வில்லை என்றே சொல்லலாம். மதம் என்பதை புகுத்தாமல் மனிதநேயம் என்ற அடிப்படையில் மேற்கண்ட பிரச்னைகளில் கடந்த 5 ஆண்டுகளில் அணுகியிருந்தாலே 2 ஆளுமைகள் இல்லாத தமிழகத்தை தம் வசமாக்கி இருக்க முடியும்... அல்லது குறைந்த பட்சம் தமது கட்சியின் மீது மக்கள் கொண்டிருந்த அணுகுமுறையை மாற்றி இருக்க முடியும்.
மாறாத மதவாத எதிர்ப்பு
தமிழக மக்களின் நாடி துடிப்பை சரியாக கணிக்காத பாஜக, 2வது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றும், தமிழகத்தில் அதிக தொகுதிகளை பெறுவதில் கோட்டை விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், மதவாத எதிர்ப்பு என்ற மனநிலையை முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் மெருகேற்றும் வாய்ப்பை தமது செயல்பாடுகளினால் பாஜக அரங்கேறி இருக்கிறது.
பெரியார் பிறந்த மண்
ஆக மொத்தத்தில், 2014 மற்றும் 2019 என்ற இரு லோக்சபா தேர்தல் முடிவுகள் நமக்கு ஒரு ஆழமான, திடமான உண்மையை உணர்த்தி இருக்கின்றன. மத வாதம் என்பது எத்தருணத்திலும் தமிழகத்தில் தலை தூக்க விடமாட்டோம் என்பதை வாக்காளர்கள் மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்திருக்கிறார்கள் என்பது தான். காரணம்.. தமிழகம் என்பது பெரியார் பிறந்த மண்... சமூக நீதியின் பிறப்பிடம் என்பது தான்.