ஜனவரி 2-ல் தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டம்... முதல் நாளில் ஆளுநர் உரை
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது.
இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அறிக்கை
இந்நிலையில், சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடர் ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டசபையில் இரங்கல்
ஜனவரி 2 ந்தேதி மாலை நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்படும் . முதல் நாள் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் திட்டம்
இந்த கூட்டர் தொடரில் மேகதாது, ஸ்டெர்லைட் மற்றும் கஜா புயல் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்ப திட்டமிட்டு வரும் நிலையில், அதனை எதிர்க்கொள்ள அ.தி.மு.க. தரப்பும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, ராமசாமி படையாட்சியர் உருவப் படம் இந்த கூட்டத் தொடரில் பேரவையில் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் உரை
மேலும், இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீது விவாதங்கள் நடைபெறும். அதன்பின்னர், விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார்.