பிப். 14ம் தேதி வரை தான் பட்ஜெட் கூட்டத்தொடர்... அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
சென்னை:சட்டசபை கூட்டத்தொடரை வரும் 14-ம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையானது அறிவித்தபடி, காலை 10 மணிக்கு கூடியதும், துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2019-20ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.
காலை 10 மணி முதல் நண்பகல் 12.39 மணி வரை ஓ.பன்னீர்செல்வம் தமது உரையை வாசித்தார். பின்னர் பட்ஜெட்டுக்கு சட்டசபையின் ஒப்புதலை பெற்று தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து, இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாகவும், சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் அவை கூடும் என்றும் அவர் அறிவித்தார். இதையடுத்து சபாநாயகர் தனபால் அறையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் உள்ளிட்ட பிற அலுவல்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரை 11ம் தேதி முதல் 14-ம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவர். விவாதம் முடிந்ததும், 14-ம் தேதி விவாதங்களின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பார். அந்த நிகழ்வுடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடையும்.