என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? அன்றே சவால் விட்ட குஷ்பு...சந்திக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்
சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரா என்று குஷ்பு விட்ட சவாலை சந்திக்க தயாராகி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை: சில சவால்கள் சுவாரஸ்யமானவை... அதுவும் சட்டசபைத் தேர்தல் நேரத்தில் எதிர் எதிர் அணியில் உள்ளவர்கள் விடும் சவால்களும் அதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளும் வாக்களர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுக்கும். இந்த சட்டசபைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று கேட்ட குஷ்புவின் சவாலை எதிர்கொள்ள தயாராகி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகம் புதுச்சேரியில் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக, முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டன. கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணிகளை சைலண்டாக செய்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கி விட்டார் சீமான். அமமுகவும் தனி அணியாக களமிறங்குகிறது. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன்.
திமுகவில் விருப்பமனு
எதிர்கட்சியான திமுகவில் கடந்த வாரம் முதலே விருப்பமனு வாங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கியிருக்கிறார் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். கிட்டத்தட்ட அவருக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் விருப்பம்
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த இரு தேர்தல்களில் மறைந்த ஜெ. அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். திருவல்லிக்கேணி பகுதிகளுடன் இணைப்பதற்கு முந்தைய சேப்பாக்க தொகுதியில் மறைந்த முதல்வர் கருணாநிதி மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாகவே இத்தொகுதியை உதயநிதி தேர்ந்தெடுத்திருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவின் குஷ்பு
விருப்பமனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சித்தலைவரும் பொதுச்செயலாளரும் வாய்ப்பளித்தால் வெற்றிப்பெறுவேன் என பேட்டியளித்தார். இதே தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்புவை களமிறக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக கடந்த சில மாதங்களாகவே இந்த தொகுதியில் அடிப்படை வேலைகளை ஆரம்பித்து விட்டார் குஷ்பு.
குஷ்பு சவால்
திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு போன குஷ்புவிற்கு சரியான மதிப்பு இல்லாமல் போகவே பாஜகவில் இணைந்தார். குஷ்பு முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களம் காணப்போகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒருமுறை பேட்டியளித்த போது, சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரா என்று சவால் விட்டார் குஷ்பு.
உதயநிதி தயார்
சட்டசபை தேர்தலில் எந்த இடத்தில் தலைமை அனுமதித்தாலும் போட்டியிடதயார் என்றும் குஷ்பு கூறியிருந்தார். இந்த நிலையில்தான் குஷ்புவின் சவாலை சந்திக்க தயாராகி விட்டார் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கோட்டையான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வெல்லப்போவது உதயநிதியா? குஷ்புவா? இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்து விடும்.