கூட்டணியில் இருந்தாலும்.. பாஜகவை அட்டாக் செய்தால்தான் ஓட்டு கிடைக்கும்... ஆட்டத்தை ஆடும் அதிமுக
சென்னை: என்னதான் கூட்டணியில் இருந்தாலும் பாஜகவையும் ஒருபிடி பிடித்தால் வாக்குகளை தக்க வைக்க முடியும் என்ற முடிவோடு அதிமுக ஆட்டத்தை ஆட தொடங்கிவிட்டது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியை வெளிப்படையாக கடுமையாக எதிர்க்கும் அணிக்குதான் வாக்குகள் கிடைத்து வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் மோடியா? லேடியா? என காட்டமான பிரசாரத்தை மேற்கொண்டார் ஜெயலலிதா.
பாஜகவை முதன்மை எதிரியாக முன்னிறுத்தி ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். இதனால் 2014 தேர்தலில் அதிமுக அணி அமோக வெற்றியைப் பெற்றது.
பாஜகவுக்கு செம டோஸ்... திரிசங்கு நிலையில் பாமக, தேமுதிக... கூட்டணி கட்சிகள் இல்லாமல் அதிமுக பிரசாரம்
திமுக அணிக்கு வெற்றி
2019 தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்தது. இன்னொரு பக்கம் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை திமுக உருவாக்கியது. திமுக அணியின் பிரதான இலக்காக பாஜக இருந்தது. இதனால் 2019 லோக்சபா தேர்தலில் திமுக அணி வெற்றியைப் பெற்றது.
பாஜக- அதிமுக ஒன்றுதான்
இதனை உணர்ந்து கொண்ட அதிமுக, பாஜகவையும் இழுத்துக் கொண்டு செல்லும் போக்குக்கு செக் வைத்தது. அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு இது கை கொடுக்கவும் செய்தது. இருந்தபோதும் திமுக கூட்டணியினர், அதிமுகவை பாஜகவின் ஒரு அங்கமாகவே பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதிமுகவை எச்சரித்த சர்வே முடிவுகள்
மேலும் சர்வே முடிவுகளும் கூட பாஜகவை அதிமுக சுமப்பதால் அந்த கட்சியின் சொந்த வாக்கு வங்கியே சேதாரமடையும் எனவும் சுட்டிக்காட்டி இருந்தன. இதனால் பாஜகவை கழற்றிவிடவும் முடியாமல் இழுத்துக் கொண்டு போகவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது அதிமுக.
பாஜக மீது அதிமுக மறைமுக அட்டாக்
இந்த நிலையில் பாஜகவை மறைமுகமாகவேனும் விமர்சித்தால்தான் மக்களிடையே நம்பிக்கையை பெற முடியும்; வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அதிமுக வந்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசார கூட்டத்தில் கேபி முனுசாமி போன்ற அதிமுக மூத்த தலைவர்கள் பாஜகவை பிடிபிடித்து வறுத்தெடுத்துவிட்டனர். இருந்த போதும் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த தெளிவு உறுதிப்படுத்தாதவரை அதிமுகவின் இந்த ஆட்டம் கை கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறிதான்.