அதிமுக கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்ற ஸ்கெட்ச்?.. டப்பிங் மட்டும்தான் தமிழருவி மணியன்??
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் அத்தனை வியூகங்களையும் கையில் எடுக்க தொடங்கிவிட்டன. தங்களது தோளில் சுமக்க தயாராக இல்லாத அதிமுகவின் தலைமையில் வலிமையான கூட்டணி அமைவதைத் தடுக்கும் வேலைகளில் பாஜக இப்போது படுபிஸியாம்.
தமிழக அரசியல் களத்தில் பாஜகவை திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் சேர்க்க விரும்புவதில்லை. அதேநேரத்தில் மத்தியில் ஆளும் கட்சி என்பதால் அதிமுக தோளில் ஏறி வாலண்டியராக ஏறி அமர்ந்து கொண்டது பாஜக.
இதை சகித்துக் கொள்ளாத அதிமுக, வேண்டா வெறுப்பாக ஒட்டும் இல்லை- உறவும் இல்லை என்கிற போக்கில் பாஜகவுடன் நடந்து கொள்கிறது. ஆனாலும் இந்த அவமரியாதையையும் சகித்துக் கொண்டுதான் அதிமுகவுடன் நட்பு பாராட்டியும் வந்தனர் பாஜக தலைவர்கள். அழையா விருந்தாளியாக எத்தனை நாளைக்கு ஓசி சாப்பாடு? என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டது பாஜக.
7 பேர் விடுதலை விவகாரம்... தமிழக அரசுக்கு யோசனை கூறும் வேல்முருகன்
நிம்மதியில் அதிமுக
இதனால் ச்சீ..ச்சீ இந்த பழம் புளிக்கும் என அதிமுகவையும் விமர்சித்து வருகிறது பாஜக. இந்த நிலைப்பாடால் அப்பாடா, சிறுபான்மை மக்கள் இனிமேலாவது நம்மை நம்புவார்கள் என கணக்குப் போடுகிறது அதிமுக. இதற்காக பல்வேறு அறிவிப்புகள், சந்திப்புகளை ஆளும் அதிமுக தரப்புகளை மேற்கொண்டு வருகிறது.
கடுப்பில் பாஜக
இப்படியே போனால் அதிமுக தலைமையில் ஒரு வலிமையான அணியும் திமுக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணியும் உருவாகிவிடும். நம்மை ஏற்கனவே சீந்துவார் இல்லாத நிலையில் கூட்டணி இல்லாமல் தேர்தலுக்குப் போவது எப்படி என கைபிசைந்து நிற்கிறது.. திரைப்படத்தில் நன்றாக இருக்கும் குடும்பங்களை பிரிக்க நகத்தைக் கடிக்கும் செந்தில் கதாபாத்திரம் உங்களுக்கும் நினைவில் வந்தால் நாம் பொறுப்பில்லை.
ஆறுதல் ரஜினிகாந்த்
பாஜகவுக்கு இப்போது ஒரு ஆறுதலான நம்பிக்கை நடிகர் ரஜினிகாந்த். அவரை தங்களுக்கான குரலாக மாற்றுவதற்கு பெரும்பாடுபடுகிறது பாஜக. ரஜினியின் ஒற்றை வாய்ஸில் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. இதனால் தங்களை அவமதித்த அதிமுக அணியை உடைத்து அங்கிருக்கும் கட்சிகளை ரஜினிகாந்த் பக்கம் தள்ளிவிடுவது என்கிற நாரதர் பணியை செவ்வனே தொடங்கியிருக்கிறது பாஜக.
கூட்டணிக்கு வேட்டு
இதன் முதன் இலக்குதான் அதிமுக- பாமக உறவுக்கு பகிரங்கமாக வைக்கப்பட்ட வேட்டு. பாமகவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்துடன் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதை நாடும் நாட்டு மக்களும் நன்கறிவார்கள். இந்த நிமிடம் வரை ரஜினிகாந்துடனான கூட்டணியை பாமக நிராகரிக்கவில்லை என்பதையும் தமிழக மக்களும் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாமகவின் திட்டம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை கொடுத்த தங்களுக்கு சட்டசபை தேர்தலில் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்பது பாமகவின் ஒரு கணக்கு. இன்னொரு கணக்கு பாஜகவுடன் நட்பு பாராட்டினால் மத்திய அமைச்சரவையில் எப்போதாவது இடம் கிடைத்துவிடாதா? என்பது. இந்த இரண்டு மறைமுக திட்டங்களுடனேயே ரஜினிகாந்துடனும் பேச்சுவார்த்தைகளை பாமக நடத்தியும் வந்தது. இப்பேச்சுவார்த்தைகளால் அதிமுகவுடனான பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம் என்பதும் பாமகவின் திட்டம்.
திடீர் வாய்ஸ் கொடுத்த மணியன்
இதைத்தான் கடந்த காலங்களில் பல தேர்தல்களில் பாமக கடைபிடித்தும் இருக்கிறது. இந்நிலையில்தான் திடீரென தமிழருவி மணியன் பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் கூட்டணியில் பாமக நிச்சயம் இடம்பெறும் என பச்சை முட்டையை பட்டென போட்டு உடைத்துவிட்டார். இதை பாமகவும் உடனடியாக மறுக்கவில்லை. அதிமுகவோ, பாமகவை தக்கவைத்துக் கொண்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்கிற கணக்கில் இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பாஜகவின் அஜெண்டாவை தமிழருவி மணியன் செவ்வனே நிறைவேற்ற திகலடித்துக் கிடக்கிறது அதிமுக.
நமட்டு சிரிப்பு பாஜக
இதனால்தான் பாமகவை சமாதானப்படுத்தும் வகையில் அதன் கோரிக்கைகளில் பிரதானமான ஒன்றான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததும்கூட. இதை உடனே பாமக வரவேற்றாலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்கட்டும் கூட்டணி குறித்து பார்க்கலாம் என பட்டும்படாமலும் டாக்டர் ராமதாஸ் பேசியிருப்பது பாஜகவை ரொம்பவே மகிழ்ச்சியடைய வைத்துள்ளதாம். தாங்கள் தொடங்கி வைத்த நாரதர் பணி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்கிற நாராச மகிழ்ச்சிதான் அது.