தமிழக சட்டசபை: BAN NEET முக கவசத்துடன் வந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள்!
சென்னை: தமிழக சட்டசபையின் 3 நாட்கள் கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் BAN NEET என்ற வாசகத்துடன் கூடிய முக கவசங்களை அணிந்து வந்தனர்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முடித்து வைக்கப்பட்டது. நடப்பாண்டின் 2-வது சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
சட்டசபை கூட்டத் தொடர் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டது. தலைமைச் செயலகத்தில் இதற்கான ஏற்பாடுகளை செய்ய இயலாத நிலையில் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.
நீட் தேர்வு: தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்.. ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்?
புதன்கிழமை வரை கூட்டம்
இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடர் வரும் புதன்கிழமை வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்களுக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இன்று ஒத்திவைப்பு
இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் திட்டமிட்டபடி தொடங்கியது. இதில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் மற்றும் 23 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சட்டசபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் கூடுகிறது.
நீட் உள்ளிட்ட விவகாரங்கள்
2020-2021-க்கான துணை நிதிநிலை அறிக்கை புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நீட் தேர்வு மரணங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பிரதமர் கிசான் திட்டத்தின் முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து சட்டசபையில் விவாதங்கள் நடைபெறக் கூடும். நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி சட்டசபை முற்றுகைப் போராட்டமும் அறிவிக்கப்பட்டதால் கலைவாணர் அரங்கப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
BAN NEET முக கவசம்
முன்னதாக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க கலைவாணர் அரங்கத்துக்கு காலை 9 மணி முதலே எம்.எல்.ஏ.க்கள் வருகை தரத் தொடங்கினர். திமுக எம்.எல்.ஏக்கள் BAN NEET என்ற வாசகத்துடன் கூடிய முக கவசத்தை அணிந்திருந்தனர்.