தமிழக சட்டப்பேரவை 28ம் தேதி கூடுகிறது.. எடப்பாடி அரசுக்கு அப்படி ஒரு சிக்கல் வருமா?
சென்னை: ஜூன் முதல் வாரத்தில் துவங்கி இருக்க வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இதில் வெற்றி பெறாவிட்டால் ஆளும் அதிமுக அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடைசியாக கடந்த பிப்ரவரி 8ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடந்தது. 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பிப்வரி 14ம் தேதி தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த முறை கூட்டத்தொடர் தாமதமாக வரும் ஜூன் 28ம் தேதி துவங்க உள்ளது.
ஒரு மாதம் காலம் வரை நடக்க உள்ள இந்த பேரவை கூட்டத்தெடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைகளின்மீது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுமட்டுமின்றி கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக இல்லாமல் போனால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. எனினும் அதிமுகவுக்கு முழு மெஜாரிட்டி இருப்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. கட்சி மாறி வாக்களித்தால் தான் அப்படி ஒரு நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும்.