வழக்குப் போட வேண்டுமென்றால் அனைவர் மீதும் போட வேண்டும்... அதிமுக மீது பாயும் எல்.முருகன்..!
சென்னை: பொது இடங்களில் கூட்டம் கூடியது தொடர்பாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 106 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
அதிமுக நம்மை சீண்டிப்பார்க்கிறது என்றும் இதனை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் எனவும் எல்.முருகனை வலியுறுத்தி வருகின்றனர் பாஜக நிர்வாகிகள்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாட முட்டுக்கட்டை போடுவதா என அதிமுக அரசு மீது ஏகதுக்கும் கோபத்தில் உள்ளனர் பாஜகவினர்.
எடியூரப்பாவுக்கு கல்தா கொடுக்க பாஜக திட்டம்.. கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு
சுமூக உறவு
பாஜக-அதிமுக இடையேயான உறவு சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில் அண்மையில் வி.பி.துரைசாமி கூட்டணி தலைமை குறித்து அறிவித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியது. அப்போது தொடங்கிய கருத்துமோதலும், சர்ச்சையும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் ஹெச்.ராஜா பதிவிட்ட ட்வீட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சூடான பதிலடி தந்தனர்.
விரிசல் அதிகரிப்பு
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுக-பாஜக இடையே நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரிக்கும் எனப் பார்த்தால் விரிசல் தான் அதிகரித்துச் செல்கிறது. பாஜக தனித்து போட்டியிட்டால் கூட 60 தொகுதிகளில் வெல்லும் என முருகன் ஒரு பக்கம் கூறுகிறார், மற்றொரு பக்கம் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்தாலும் சேரலாம் சேராமலும் போகலாம் என பொடி வைத்து பேசுகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா. இப்படி நடப்பவைகள் அனைத்தும் முரண்பாடாகவே உள்ளன.
வழக்குப்பதிவு
இந்நிலையில் தொற்றுநோய் பரப்பும் வகையில் நடந்துகொண்டதாகவும், சட்டவிரோதமாக கூடியதாகவும், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் 106 நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது மாம்பலம் போலீஸ். மேலும், மதுரவாயலில் பாஜக கொடிமரம் நடப்பட்டு 24 மணி நேரத்திற்குள் காவல்துறையால் அது அப்புறப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஆட்சி மேலிடத்தின் அனுமதியின்றி நடந்திருக்காது என நினைக்கிறது பாஜக தரப்பு.
பாஜகவினர் கோபம்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை முடக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக குமுறும் பாஜகவினர் எல்.முருகனிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கின்றனர். இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், வழக்குப்போட வேண்டுமென்றால் அனைவர் மீதும் தான் வழக்குப்போட வேண்டும் எனப் பாய்ந்ததுடன், அதிமுகவினர் தமிழகத்தில் எங்குமே நிகழ்ச்சிகளை நடத்தவில்லையா என்பதை சூசகமாக கேட்டிருக்கிறார்.