20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி
சென்னை: தமிழக பாஜகவுக்கு டிசம்பர் முதல் வாரத்திற்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவரை நியமினம் செய்வதற்கான பணியை தீவிரமாக முன்னெடுத்த வந்த அமித்ஷா மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்பாக மாநில தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் பாஜக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே
புதிய தலைவர்
தமிழக பாஜக தலைவர் பதவி கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. இதனால் கட்சி வளர்ச்சிப்பணிகளில் தொய்வு உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய தலைவர் நியமனம் செய்யப்படும் வரை கூட்டுத் தலைமையாக செயல்படுமாறு டெல்லியிலிருந்து வந்த உத்தரவை அடுத்து பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து கட்சி பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.
அதிகாரப்பூர்வ
இதனிடையே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணி பேச்சுவார்த்தை, இட ஒதுக்கீடு, உள்ளிட்டவைகள் பற்றி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரப்பூர்வ தலைவர் தேவைப்படுகிறார். இதனால் தமிழக பாஜகவுக்கு தலைவரை நியமனம் செய்யும் பணியை தொடங்கினார் அமித்ஷா.
புதிய தலைவலி
மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவு இப்படி தலைவலையை ஏற்படுத்தும் என சற்றும் நினைத்து பார்த்திருக்காது பாஜக. ஆட்சி அமைப்பதில் சிக்கல், சிவசேனாவின் பிடிவாதம் ஆகியவற்றால் அங்கு உச்சகட்ட குழப்பம் நிலவி, ஒரு வழியாக ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதனால் அமித்ஷா உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களின் கவனமும் மஹாராஷ்டிராவில் மையம் கொண்டுள்ளது.
விறு விறு
ஆனாலும், தமிழக உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அதற்கு முன்பாக தலைவரை நியமிக்குமாறு இங்குள்ள நிர்வாகிகள் தேசியத் தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் 20 நாட்களுக்குள் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன், டிசம்பர் முதல் வாரத்திற்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.