ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்:எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார்.
சென்னை: அதிமுக இபிஎஸ் அணியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஓபிஎஸ் அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளுமே இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆதரவு கேட்டனர். இது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
பொதுவாக தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை தேடித்தான் பாஜக தலைவர்கள் செல்வது வழக்கமாக இருந்து வந்தது. இந்த முறை தமிழ்நாடு பாஜக தலைவர்களை அதிமுகவின் இரு அணிகளுமே தேடிச் சென்று ஆதரவு கேட்டது விமர்சிக்கப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு பாஜக, அதிமுகவின் எந்த அணிக்கு ஆதரவு என்பதை தெரிவிக்கவில்லை. அத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? இல்லையா? என்பது குறித்தும் எதனையும் தெரிவிக்கவும் இல்லை. மேலும் இடைத்தேர்தலில் நின்றுதான் பாஜக பலத்தை கட்ட வேண்டிய தேவை இல்லை எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இன்னொரு பக்கம் அதிமுகவின் இரு அணிகளுமே வேட்பாளர்களையும் அறிவிக்காமல் இருந்தன. இதற்கு, உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவு மற்றும் தமிழ்நாடு பாஜகவின் முடிவுக்காக காத்திருப்பு ஆகியவைதான் காரணம் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அதிமுகவின் இபிஎஸ் அணி, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தது. அத்துடன் தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்ற புதிய கூட்டணி பெயரில் தேர்தல் அலுவலகம் திறந்தது. அதிமுக இபிஎஸ் அணி தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்கள் படமும் இல்லை. இதனால் அதிமுகவின் இபிஎஸ் அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்தது. ஆனால் பாஜக வேட்பாளரை நிறுத்தினால், தங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்று ஓபிஎஸ் கூறினார்.
அதிமுக இபிஎஸ் அணியின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் பதில் தரப்படும் என அண்ணாமலை கூறினார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரையே தேர்தல் அலுவலகத்தில் வைத்தது அதிமுக இபிஎஸ் அணி. அப்போதும் பாஜக தலைவர்கள் படத்தை வைக்கவில்லை. 3-வது முறையாக அதிமுக கூட்டணி எனவும் பெயரை மாற்றியது இபிஎஸ் அணி. அப்போதும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் படங்களை வைக்கவில்லை. ஆனால் தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடருகிறது அதிமுக என இபிஎஸ் அணி அறிவித்தது.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. மேலும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் அதிகாரியே முடிவெடுப்பார் எனவும் கூறியது தேர்தல் ஆணையம். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி
இதனிடையே திடீரென அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அண்ணாமலை இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணாமலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக அணிகளில் எந்த அணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கிற குழப்பமான நிலையில் அண்ணாமலையின் எடப்பாடியுடனான இந்த சந்திப்புகள் முக்கியமானதாகும்.