பாஜகவின் தெருமுனை பிரச்சாரத் திட்டம்... கட்சியை வளர்க்க புது யோசனை
சென்னை: தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பாஜகவை கொண்டு சேர்க்கும் வகையில் தெருமுனைப் பிரச்சார கூட்டங்களை நடத்துமாறு அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாராம்.
உத்திரப்பிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லட்சம் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட்டதால் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது என்பது பாஜக தலைமையின் நம்பிக்கை. இதனால் அந்த பார்முலாவை நாடு முழுவதும் கட்சியினர் மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா.
தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளா, தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் கட்சியின் அடிமட்டத்தை வலுவாக கட்டமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது பாஜக தலைமை. இதற்காக பல்வேறு வியூகங்களையும் வகுத்து கொடுத்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை: நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைது!
அனைத்து தரப்பு மக்களிடமும் பாஜகவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா எல்.இ.டி.திரை மூலம் தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஒரு வேனில் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டு, அதில் ஹெச்.ராஜா பேசுவது ஒளிபரப்பப்படுகிறது.
தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள், உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி பேசுகிறார். காரைக்குடி பகுதியில் இந்தப் பிரச்சார வாகனத்தை அதிகளவில் பார்க்க முடிகிறது. ஆனால், ஹெச்.ராஜாவின் பேச்சை நின்று கேட்கத்தான் ஆளில்லை.