அடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக
Recommended Video
சென்னை: சமீப காலமாக தமிழக, பாஜக ஐடி விங் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. தமிழக பாஜகவின் ட்விட்டர் கணக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில வாரங்களாக மிகமிக ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சியினரை வலி சென்று வம்பு இழுத்து விமர்சனக் கணைகளை தொடுத்து வருகிறது தமிழக பாஜக ட்விட்டர் அக்கவுண்ட். குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சி தலைவர்களையும் குறிவைத்து அவர்கள் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து, கேலியும், கிண்டலும் செய்து, பாஜக ஆதரவாளர்களுக்கு கலகலப்பூட்டி வருகிறது.
இப்போது இவர்களிடம் சிக்கி உள்ளது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள ஒரு திரையரங்கில் அசுரன் திரைப்படத்தையும் கண்டு ரசித்து அதை ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.
அசுரன் திரைப்படம் சொல்லும், கருத்துக்கு தனது பாராட்டையும் தெரிவித்து இருந்தார். பஞ்சமி நில மீட்பு தொடர்பாக அசுரன் படம் பேசுவதாக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுகவின் முரசொலி நாளிதழ் அலுவலகம், பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட இடம் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து ட்வீட் செய்தார். தமிழக பாஜக, ஒரு படி மேலே சென்று, ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட்ட அந்த படத்தில், ஸ்டாலினை சிவப்பு கலரால் 'வட்டமிட்டு' அவரின் அருகே யாரையும் இருக்க விடவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 17, 2019
செய்தொழில் வேற்றுமை யான்"
பிறப்பால் மட்டுமின்றி மனதாலும் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் ஒன்றே என அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் செயல் புரிபவரே சிறந்த மனிதன்.
அத்தகைய செயல் புரியாதோர் எந்த சிறப்பியல்பும் அற்ற மேன்மை இல்லாதவர் ஆவர். pic.twitter.com/26GQfRgZYi
ஸ்டாலின் தியேட்டரில் அமர்ந்திருந்த இருக்கைக்கு இருபக்கமும் உள்ள இருக்கைகளில் துண்டுபோடப்பட்டு, இருந்தது. அதற்கு அடுத்த இருக்கைகளில்தான் திமுக நிர்வாகிகள் வரிசையாக அமர்ந்து இருந்தனர். தனது பக்கத்தில் வேறு யாரும் அமர்ந்து விடக்கூடாது என்ற ஸ்டாலினின் ஏற்பாடுதான் இது என்று தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" அதாவது, பிறப்பால் மட்டுமின்றி மனதாலும் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் ஒன்றே என அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லும் செயல் புரிபவரே சிறந்த மனிதன். அத்தகைய செயல் புரியாதோர் எந்த சிறப்பியல்பும் அற்ற மேன்மை இல்லாதவர் ஆவர். இவ்வாறு, திருக்குறளை குறிப்பிட்டு, ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளது.
முன்னதாக, ப. சிதம்பரத்தை, சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லக் கூடிய படத்தை வெளியிட்டு, அதில், "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று" என்ற திருக்குறளை உதாரணமாகச் சொல்லி விமர்சனம் செய்திருந்தது தமிழக பாஜக.