ஐ.டி.விங்கை ஸ்ட்ராங் படுத்தும் தமிழக பாஜக... புதிய கட்டமைப்பை உருவாக்க தீவிரம்
Recommended Video
சென்னை: தமிழக பாஜகவின் ஐ.டி.விங்கை வலுவாக கட்டமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துக்கு இணையாக அவர்கள் வகுக்கும் வியூகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்பட பாஜக ஐடி விங்கில் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கைகோர்த்துள்ளார்கள். இது அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சற்று மிரட்சியடைய வைத்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் களத்தில் இறங்க உள்ளனர். திமுகவை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான பணிகளை இம்மாதமே அவர்கள் தொடங்க இருக்கின்றனர். நாளை டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இதற்கடுத்து பிரசாந்த் கிஷோர் தனது பணியை தொடங்க உள்ள இடம் தமிழகம் தான்.
இந்த வாரத்தில் பிரசாந்த் கிஷோர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே திமுகவுக்காக பிரசாந்த் கிஷோர் டீம் களமிறங்குவதால், அந்த டீமின் முயற்சிகளை முறியடிக்க தமிழக பாஜக வரிந்துக்கட்டிக்கொண்டு பணிகளை தொடங்கவுள்ளது. பாஜக ஐடி விங்கில் கட்சி கொள்கையில் பிடிப்புடைய, பாஜக சித்தாந்தத்தில் பற்றுடைய நூற்றுக்கணக்கான பட்டதாரிகளை ஊதியத்துடன் பணிக்கு அமர்த்தி அவர்கள் மூலம் திமுகவுக்கு டஃப் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆட்கள் தேர்வு கூட விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரஷாந்த் கிஷோர் டீமை கண்காணித்து அவர்களுக்கு செக் வைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவும் இறங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் பிரசாந்த் கிஷோர் டீம் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுவது சற்று கடினம் என்றும், அவரது டீமுக்கு அதிமுக தரப்பில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாஜகவை போல் அதிமுக சமூக வலைதளப் பிரிவிலும் பல புதிய மாற்றங்கள் நிகழக்கூடுமாம். திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவுகளை வெளியிட ஆட்கள் பணியமர்த்துவது குறித்தும் அக்கட்சி ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.