தமிழக பட்ஜெட் 2019: இலவச டூ-வீலர் தொடர்ந்து வழங்கப்படும்.. அரசு ரூ.250 கோடி ஒதுக்கீடு!
அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையில் தமிழக சட்டசபையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றது. அதன்படி, தமிழகத்தில் 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011 முதல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
கிராமப்புற கோவில்களுக்கான நிதி உதவி திட்டமும், ஒருகால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைகிறார்கள்.
2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார்.