பெரிய அளவில் முன்னேறும்.. 2 வருடங்களில் பல மாற்றம் வரும்.. சென்னைக்கு அள்ளிக்கொடுத்த பட்ஜெட்!
தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட்டில் இன்று சென்னை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட்டில் இன்று சென்னை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இன்று காலை துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் ஆகும் இது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 2021ல் நடக்கும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் நிறைய அறிவிப்புகள் இதில் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் மொத்த வருவாய் எவ்வளவு? செலவு எவ்வளவு.. பட்ஜெட் விவரம்
சென்னை அறிவிப்புகள்
இந்த பட்ஜெட்டில் சென்னை தொடர்பான அறிவிப்புகள், சென்னை - பெங்களூர் தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் புதிய மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்படும். 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் சென்னை - பெங்களூர் இடையே இருக்கும் ஊர்கள் அதிக அளவில் முன்னேற்றம் அடையும். அதேபோல் சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு. இதன் மூலமும் சென்னையில் புதிய மெட்ரோ பணிகள் தொடங்கப்படும். மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும். சென்னை வீடுகளில் மின்சாரம் அளவிட ஸ்மார்ட் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும்
என்ன கூட்டாண்மை
சென்னை மாநகர கூட்டாண்மை எனும் புதிய திட்டம் தொடங்கப்படும்.சென்னை வளர்ச்சிக்காக உலக வங்கியின் நிதி உதவியாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் பெறப்படும். இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு தேவையான ஒப்புதல் பெறப்படும். சென்னை தொடர்பான பல்வேறு திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்படும். சென்னைக்கு புதிய முகம் கொடுக்கும் வகையில் பல திட்டங்கள் இதில் செயல்படுத்தப்படும்.
குடிநீர் எப்படி
சரியான குடிநீர் விநியோகம். சாலைகள், பாலங்கள் பராமரிப்பு, புதிய பாலங்கள், தொலைத்தொடர்பு சாதன முறைகள், புதிய பேருந்துகள் என்று பல விஷயங்கள் அறிமுகம் செய்யப்படும். இதனால் சென்னை இன்னும் இரண்டு வருடங்களில் மாபெரும் வளர்ச்சியை சந்திக்கும். சென்னை கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் வடிகால்கள் சீரமைக்க ரூ.5,439 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூவம் இந்த முறை கண்டிப்பாக சுத்தப்படுத்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.