இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... 4 அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
அந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, உட்பட 4 பேர் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் நெகட்டிவ்
முதல்வர் தலைமையில்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜூலை 31-ம் தேதிக்கு மேல் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்வு அளிப்பதா என்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
திறப்பது எப்போது?
மேலும், தமிழகம் முழுவதும் வழிபாட்டுத்தலங்களை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திறப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களை மட்டும் பூட்டி வைத்திருப்பது ஏன் என பல தரப்பில் இருந்தும் அரசுக்கு கேள்வி எழுப்பப்படுகின்றன. கிராமப்புற பகுதிகளில் மட்டும் சிறிய கோவில், மசூதி, சர்ச்களை திறக்க தமிழக அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலமின்மை
இன்று மாலை நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 4 மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்களால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. இதேபோல் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இப்போது ஓய்வில் உள்ளார். அவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் வாழ்வாதாரம்
மேலும், லாக்டவுன் காரணமாக மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பாகவும், மாவட்டங்களில் கொரோனா பாதிப்பின் வீரியம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.